கனத்த இதயத்துடன் விஜயகாந்த் சொன்ன அந்த சொல்! நொறுங்கிய ராவுத்தர்! இதுதான் நட்புக்கு இலக்கணம்
சென்னை: நல்ல நண்பன் இப்ராஹிம் ராவுத்தரும் கேப்டன் விஜயகாந்தும் பிரிவதற்கு காரணமாக அமைந்தது என்ன? பிரியாவிட்டால் இருவரது நட்பில் என்ன நடந்திருக்கும்?
விஜயகாந்தும் ராவுத்தரும் சிறு வயது முதலே நண்பர்கள். கதை தேர்வு தொடங்கி ஊதியம் பேசுவது என எதுவாக இருந்தாலும் ராவுத்தரை கேளுங்கள் என்றுதான் விஜயகாந்த் சொல்வார். விஜயகாந்துக்காக திரைப்பட தயாரிப்பாளராக மாறியவர் ராவுத்தர்.

இவர் ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ், ஐ.வி. சினி புரொடெக்சன்ஸ் (I for Ibrahim and V for Vijayakanth) ஆகிய 3 பேனர்களில் பல படங்கள் தயாரிக்கப்பட்டன. இநத் பேனர்களில் விஜயகாந்த் ஏராளமான படங்களில் நடித்து அவை சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
உழவர் படம் தான் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த முதல் படம். இந்த படம் தீபாவளிக்கு ரிலிஸான ரஜினிகாந்தின் மனிதன், கமலின் நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு வெற்றிக்கரமாக ஓடியது. இதையடுத்து பரதன், தாய்மொழி, ராஜதுரை, கருப்பு நிலா, தர்மா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அது போல் இப்ராஹிம் ராவுத்திரின் தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ் பேனரில் விஜயகாந்த் நடிப்பில் முதலில் வெளியான படம் பூந்தோட்ட காவல்காரன்.
இதைத் தொடர்ந்து பாட்டுக்கு ஒரு தலைவன், என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண், சிம்மாசனம் , புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சக்கரைத் தேவன், உளவுத் துறை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ராவுத்தரும் , விஜயகாந்தும் பிரிய தொடங்கினார்கள்.
இதுகுறித்து ராவுத்தரின் மகன் ஒரு பேட்டியில் கூறியிருந்ததாவது: ராவுத்தர் குறித்து விஜயகாந்திடமும் , விஜயகாந்த் குறித்து ராவுத்தரிடமும் யாரோ சிலர் பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டே இருந்தனராம். இதனால் இருவரது மனமும் வேதனை அடைந்ததாம்.
ஒரு நாள் கனத்த இதயத்துடன் விஜயகாந்த், ராவுத்தரை அழைத்து யாரோ சிலர் நமக்குள் விரோதத்தை ஏற்படுத்த சதி செய்கிறார்கள். இப்படி தொடர்ந்து சதி செய்து கொண்டே இருந்தால் நம் நட்பிற்கு களங்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே நாம் சண்டை சச்சரவு இல்லாமல், மன வருத்தம் இல்லாமல் பிரிந்து விடுவதுதான் நல்லது என்றாராம்.
இதை கேட்ட ராவுத்தர் நொறுங்கி போய் விட்டார் என ராவுத்தர் மகன் தெரிவித்தார். ஆனால் இந்த பிரிவு இருவரின் வாழ்வையும் புரட்டி போட்டுவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இது குறித்து விஜயகாந்த் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முன்னே வந்து சென்றன.
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா" என்று எழுதியிருந்தார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications