"தண்ணீர் பாட்டில்" எடப்பாடி பழனிசாமி.. "ஹோட்டல்" பாலிட்டிக்ஸ்.. மொத்த அதிமுகவை அலற விட்ட டி.ஆர்.பாலு
டி ஆர் பாலு எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்த்துள்ளார்
சென்னை: தனக்கே தெரியாத "சமூகநீதி" பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுகவின் டிஆர் பாலு காட்டமாக கூறியுள்ளார்.. இன்னும் சில நாட்களில் இந்த "கூத்து" மிக மோசமான - குழாயடிச் சண்டையாக மாறப் போகிறது, தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய அதிகப்பிரசங்கி வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிஆர் பாலு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார்.. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்.
அப்போது இந்த நிகழ்வில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி பேசும்போது, திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. குறிப்பாக திமுகவின் சமூக நீதி குறித்து, குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
"பழங்குடி இனத்தைவரை ஜனாதிபதியாக்கும் ஜெயலலிதாவின் கனவு நிறைவேறும் தருணம். பிரதமர் மோடியின் வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது. சமூக நிதி பேசும் முதல்வர் ஸ்டாலின் திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி திராவிட மாடல் எனப் பேசி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். திமுக சூழ்ச்சியால்தான் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மாவால் வெற்றி பெற முடியவில்லை... வாய் அளவிலும் ஏட்டு அளவிலும் சமூக நிதி பேசும் கட்சிகளுக்கு மத்தியில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவராக்க உதவியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா" என்றார்.

எடப்பாடி பேச்சு
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு பதிலடி தந்துள்ளார்.. இது தொடர்பாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவின் "முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்" திரு. பழனிசாமி - தனக்கே தெரியாத "சமூகநீதி" பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாராயணன்
எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும். திராவிட முன்னேற்றக் கழகமும், கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து - அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணனை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது.

மீராகுமார்
இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவராக - மிகச் சிறந்த நிர்வாகியான பாபு ஜெகஜீவன்ராமின் மகள் மீராகுமாரை தேர்வு செய்யப்படுவதற்குத் திமுக உறுதுணையாக இருந்தது. பட்டியலின - பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல - உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது திமுக அரசும் - கலைஞரும்தான் என்ற பாலபாடம் எல்லாம் பாவம் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
தன் கட்சியின் பொதுக்குழுவில், அம்மையார் ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் பதவியில், தான் எப்படிக் குறுக்குச் சால் ஓட்டி அமருவது, அதற்குக் கோடி கோடியாகக் கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது, ஒவ்வொரு நாளும் பொதுக்குழு உறுப்பினர்களை எப்படி விலைக்கு வாங்குவது என்ற ஆலோசனையில் அவர் மூழ்கியிருப்பது ஒருபுறமிருக்க, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரில் யார் பதவியில் இருக்கிறார்கள், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்பது எல்லாம் தெரியாமல் தவிக்கிறார். அதிமுக திக்குத் தெரியாத காட்டில் - திசை தெரியாத ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க - புலி வேடம் போட்டுத் திமுக மீது பாய்கிறார்.

ஹோட்டல்
அ.தி.மு.க.விற்கு என்று ஒரு தலைமைக் கழகம் இருந்தும் - அங்கே குடியரசுத் தலைவர் வேட்பாளரை அழைத்து தங்கள் ஆதரவைக் கொடுக்க முடியாமல் - பிளவுபட்டு - ஆளுக்கொரு பக்கம் நின்று "தண்ணீர் பாட்டில்" வீசிக் கொண்டிருக்கும் பழனிசாமி போன்றவர்களுக்கு நாவடக்கம் முதலில் தேவை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றாலும், குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு என்றாலும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைத் தேர்வு செய்யாமல் - நட்சத்திர ஹோட்டலில் அரசியல் நடத்தும் பழனிசாமி போன்றோர் தி.மு.க.வின் சமூகநீதி வரலாற்றைச் சற்று படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கூத்து - குழாயடி சண்டை
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவைக் கூட - தங்களுக்குள் "முன்னாள் ஒருங்கிணைப்பாளர்" "முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்" எனப் போட்டி போட்டுக் கொண்டு - உண்மையான அ.தி.மு.க.விற்கு யார் தலைவர் என்ற நிலை தெரியாமல் அளித்திருக்கும் இந்த ஆதரவுக்கு வேறு காரணம் தேட முடியாது என்பதால் தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுத்து - தன் கட்சிக்குள் நடக்கும் "ஸ்ரீவாரி மண்டப" கூத்துக்களை மறைக்க பழனிசாமி முயற்சி செய்கிறார். அது நடக்காது. இன்னும் சில நாட்களில் இந்த "கூத்து" மிக மோசமான - குழாயடிச் சண்டையாக மாறப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய அதிகப்பிரசங்கி வேலையை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!

சமூகநீதி
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி - ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, மதச்சார்பி்ன்மையை, மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு குடியரசுத் தலைவர் வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் - அ.தி.மு.க உட்கட்சிச் சண்டையில் - தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. அடிவருடி என்ற பட்டத்தைத் தான் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று பழனிசாமி ஆசைப்படுகிறார். அதை அவர் தாராளமாகச் செய்யட்டும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் - சமூகநீதியையும் கொச்சைப்படுத்தும் ஈனச் செயலில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications