இப்படியெல்லாம், குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 திட்டம் தேவையா? - பாஜக நாராயணன் கேள்வி!
சென்னை : 'சரக்கை' அதிகம் விற்று பலரின் விதியை முடித்து, குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை தேவையா? மது விலக்கைநடைமுறைப்படுத்துங்கள். பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதியாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்குவோம் என அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் உரிமைத்தொகை திட்டத்தை இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின், மாதம் ரூபாய் 1000 உரிமைத்தொகை கொடுப்பதற்காக நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
அதற்கு பாஜக நாராயணன், வருவாயைப் பெருக்கும் வேறு திட்டங்கள் எதுவும் இல்லாமல் டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து, அதன் மூலம் வரும் பணத்தை குடும்பத் தலைவிகளுக்கு வழங்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதி
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. குறிப்பாக பால் விலை குறைப்பு, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறியிருந்தது திமுக. தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சியமைத்தார் மு.க.ஸ்டாலின்.

உரிமைத்தொகை எப்போது?
முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற கையெழுத்திட்டார். ஆனால் பெண்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த மாதம் ரூ.1000 உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆன நிலையில் எப்போது இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

தாய்மார்கள் கேட்டார்கள்
இந்நிலையில், நேற்று கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் செப். 5-ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இன்னொரு திட்டமும் இருக்கிறது. இப்போது கூட சில தாய்மார்கள், உரிமைத் தொகை என்னவாயிற்று? மாதம் ரூபாய் 1000 கொடுக்கிறேன் என்று சொன்னீர்களே? என்று கேட்டார்கள் எனக் கூறினார்.

நிதியை சரி செய்கிறோம்
மேலும், அந்தத் திட்டம் நிச்சயம் வரும். நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம், விரைவில் அதையும் சரி செய்து நிச்சயமாக, உறுதியாக அதையும் நிறைவேற்றுவோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் கலைஞருடைய மகன், சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின், ஆகவே, அந்த நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

முன்பே ஏன் சொல்லவில்லை?
இந்நிலையில், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி, வருவாயைப் பெருக்கும் வேறு திட்டங்கள் எதுவும் இல்லாமல் டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து, அதன் மூலம் வரும் பணத்தை குடும்பத் தலைவிகளுக்கு வழங்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நிதி நிலை சரியானவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்கு முன்னர் 'கஜானா காலி' என்று சொல்லி வாக்கு சேகரித்தபோது நிதி நிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘விதி’யை முடித்து நிதியா
மேலும், "வருவாயை பெருக்கும் வேறு எந்த திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில், மது விற்பனையை அதிகரிப்பதன் மூலமே வருவாய் அதிகரித்து நிதி நிலை சரியாகிறது. 'குடி குடியை கெடுக்கும்' என்ற வாசகம் கொண்ட 'சரக்கை' அதிகம் விற்று பலரின் 'விதி'யை முடித்து, குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 தேவையா? ரூபாய் 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப்படுத்துங்கள். பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications