காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை
சென்னை: சென்னை காசிமேடு கடற்பகுதியில் திடீரென டால்பின்கள் கூட்டமாக வந்து தண்ணீரில் துள்ளிக்குதித்து விளையாடத் துவங்கியுள்ளன. இந்த அழகிய காட்சியை கடற்கரைக்கு வந்த பொதுமக்களும் மீனவர்களும் தங்களின் செபோன்களில் ஆவலோடு வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்..
சென்னை மக்களின் பார்வைக்கு டால்பின்கள் அடிக்கடி தென்படுவதில்லை என்பதால், இது ஏதோ ஒரு விசித்திரமான அல்லது அரிதான நிகழ்வு என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், கடல்சார் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சென்னை கடற்கரைக்கு டால்பின்கள் வருவது மிகவும் இயல்பான ஒன்றுதான். குறிப்பாக, இந்தோ-பசிபிக் கூனல்முதுகு டால்பின்கள் மற்றும் ஸ்பின்னர் டால்பின்கள் ஆகிய இந்த 2 இனங்கள் சென்னை கடலில் அதிகமாக வாழ்கின்றன.
காசிமேட்டில் தண்ணீரில் வெளியேறிய உருவம்
இவை பொதுவாக கடலின் ஆழமான பகுதிகளில் வாழும் என்றாலும், சாளை மீன்கள் போன்ற தங்களுக்குப் பிடித்தமான இரை மீன்களை வேட்டையாடுவதற்காகக் கரைக்கு மிக அருகில் வருகின்றன. சிலசமயம் கடற்கரையில் இருந்து வெறும் 50 முதல் 100 மீட்டர் தொலைவிலேயே இவை கூட்டமாக நீந்துவதை நம்மால் பார்க்க முடியும்.
அதாவது கடல் அலைகள் சீற்றம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கும் நாட்களில் இவை கரைக்கு அருகில் வந்து விளையாடுகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக, வாரத்தில் 3 நாட்களுக்கும் மேலாக இந்த டால்பின்களை சென்னை பீச்சில் எளிதாக காண முடியும் என்று கடல்சார் அமைப்புகளின் கணக்கெடுப்புகள் சொல்கின்றன.
சென்னை கடலில் டால்பின்கள்
சென்னை கடலில் டால்பின்கள் அடிக்கடி தென்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பொதுமக்கள், கடலில் டால்பின்கள் கூட்டமாக நீந்திக் கொண்டிருப்பதை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.
ஆனால், கொரோனா லாக்டவுன் நேரத்தில், கோவளம் கடற்கரைக்கு மிக அருகில் டால்பின்கள் வந்து விளையாடிய காட்சிகள் மிகப்பெரிய அளவில் வைரலானது நினைவிருக்கலாம்..
அதுபோவலவே, காசிமேடு மட்டுமின்றி பெசன்ட் நகர் உடைந்த பாலம் பகுதி, ஈஞ்சம்பாக்கம் மற்றும் நீலாங்கரை போன்ற சென்னையின் பல்வேறு கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் காலை வேளையில் டால்பின் கூட்டங்கள் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகின்றன.
டால்பின்களை காக்கும் அரசு
மீனவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்ளுதல் மற்றும் விசைப்படகுகளின் மோதல் போன்ற காரணங்களால் சில நேரங்களில் இவை காயமடைந்து கரை ஒதுங்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் இங்கு நடப்பதுண்டு. இருந்தாலும் சென்னை கடல் என்பது இந்த அழகான டால்பின்களின் இயற்கையான வாழ்விடங்களில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அழிந்து வரும் நிலையில் உள்ள இந்த விசித்திரமான கடல் பாலூட்டிகளையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க, தமிழக அரசு சுமார் ₹8.13 கோடி நிதி ஒதுக்கீட்டில் "ப்ராஜெக்ட் டால்பின்" என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் வழியாக டால்பின்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் வாழ்விடங்களான பவளப்பாறைகள் மற்றும் கடல் புல்வெளிகள் பாதுகாக்கப்படுகின்றன.
காசிமேடு கடலில் டால்பின்
அதுமட்டுமல்லாமல் கடலில் டால்பின்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள அரசு, மீனவர்களின் வலைகளில் தற்செயலாக சிக்கும் டால்பின்களை பாதுகாப்பாக மீட்கும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கிறது.
இவற்றுடன் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை வலுப்படுத்தியும், பள்ளி மாணவர்களுக்கு டால்பின் கல்வி உதவித்தொகை வழங்கியும், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும் ஒட்டுமொத்த கடல்சார் சூழலையும் டால்பின்களையும் தமிழக அரசு தீவிரமாகப் பாதுகாத்து வருகிறது. அதனால்தான் காசிமேட்டில் டால்பின்கள் தற்போது வந்துள்ளதை தொடர்ந்து வனத்துறையினரும் கடலோரக் காவல்படையினரும் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்களாம்..!!












Click it and Unblock the Notifications