சென்னை பீச்சில் பார்த்தால்.. சட்டென தோன்றிய உருவம்.. உற்று கவனித்தால்.. என்னங்க இது? குட்நியூஸ்!
சென்னை: சென்னையில் இருக்கும் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இதில் மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன.

அதே சமயம் சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையும் ஒன்று.
இந்த நிலையில்தான் இன்று ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் அதிகாலையில் நடந்த சம்பவம் ஒன்று டிரெண்டாகி வருகிறது. பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் இன்று அதிகாலை எடுக்கப்பட்டு உள்ளது. அவரின் நண்பர் மூலம் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில்தான் அந்த உருவம் தெரிந்து உள்ளது. அந்த வீடியோவில் கடலுக்கு நடுவே ஒரு உருவம் ஜம்ப் செய்து செல்வது போல காட்சிகள் உள்ளன. கடலுக்கு நடுவே.. கப்பல்கள் எதுவும் இல்லாத அமைதியான நேரத்தில் அந்த உருவம் ஜம்ப் செய்து செல்கிறது. அது வேறு ஒன்றுமில்லை டால்பின்தான்! சென்னை கடற்கரை பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின் டால்பின் தென்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை ஈஞ்சம்பாக்கம் கடல் பகுதியில் அதிக அளவில் வெவ்வேறு இடங்களில் இதேபோல் டால்பின்கள் தோன்றி உள்ளன. இதை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர். சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. அதிக கப்பல் போக்குவரத்து, படகு போக்குவரத்து இருக்கும் இடங்களில் டால்பின்களை பார்ப்பது கடினம்.
அதேபோல் அதிக வெப்பம் உள்ள கடல் பகுதிகளிலும் டால்பின்களை பார்ப்பது அரிது. சென்னையில் அவ்வப்போது டால்பின்கள் அரிதாக தோன்றுவது வழக்கம். இதற்கு முன் 2021ல் ஒரு முறை சென்னையில் பல்வேறு பீச்களில் டால்பின்கள் தோன்றின. அதேபோல்தான் இன்றும் ஈஞ்சம்பாக்கம் பீச்சில் டால்பின் தென்பட்டு உள்ளது.
டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்ப கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. கடல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக அங்கு டால்பின்கள் தோன்றி உள்ளன.

அதேபோல் ஒரு கடல் பகுதியில் மீன்களின் வகைகள் சரியாக இருக்கிறதா, உயிரி சமநிலை சரியாக இருக்கிறதா என்பதையும் சுட்டிக்காட்டும் உயிரினமாக டால்பின்கள் உள்ளன. கடல் பகுதிகளில் டால்பின்கள் மிக மிக குறைவாக இருந்தால், அங்கே சமத்துவம் இல்லை. உயிரி சமநிலை இல்லை என்று அர்த்தம்.
அந்த வகையில் சென்னையில் டால்பின்கள் தென்பட்டு இருப்பது சுற்றுசூழல் ரீதியாக மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications