அரசியல்வாதி போல செயல்படக்கூடாது..ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கனும்-திருச்சி சிவா
சென்னை: அரசியல்வாதி போன்று செயல்படுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் எனவும் ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கவேண்டும் என்றும் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் திருச்சி சிவா பேசினார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர்கள் அணி சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சட்டத்துறை கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ எம்.பி தலைமை வகித்தார். கருத்தரங்கில் திருச்சி சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது
கருத்தரங்கில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி கூறியதாவது:- விகோரியா மகாராணி ஆட்சி செய்த போது அவர்களின் ஏஜெண்டுகளாக ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆளுநர் நாட்டிற்கு அவசியமா என்பது இப்போது புதிது அல்ல. அவர்கள் நியமிக்கப்பட்டது முதலே இந்த விவாதம் இருக்கிறது. ஆங்கிலேயர் கால ஆட்சி நடைமுறையை ஏன் தொடர வேண்டும் என்று பலரும் அப்போதே எதிர்த்தனர். அதன்பிறகே ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது..

திருச்சி சிவா பேச்சு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்ற வரையறைகள் ஏற்படுத்தப்பட்டு ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தை ஒட்டி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கருத்தரங்கில் பேசிய திருச்சி சிவா கூறுகையில், தற்போதைய சூழலில் இத்தகைய கருத்தரங்கம் அவசியம். நாடு ஒரு இக்கட்டான நிலையை சந்திக்கும் போது முன்னணியில் நிற்பவர்கள் வழக்கறிஞர்கள்தான்.

மாநில அரசுகளுக்கு எதிராக
தமிழ்நாடு ஆளுநரின் அண்மைக்கால செயல்பாடுகள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் இதுபோன்ற நிலை நீடிக்கிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல் சட்டப்பிரிவு 356 பயன்படுத்தும் சூழலில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோல செயல்படுகின்றனர். பெயரளவுக்கு மாநில கூட்டாட்சி தத்துவம் இருக்கிறது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அண்ணா அன்றே வலியுறுத்தினார்.

20 மசோதாக்கள் கிடப்பில்..
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பிறகு ஏதோ புரட்சி நடப்பது போல பரப்புகின்றனர். ஆளுநர் அவருக்கு உரிய கடமையை முறையாக செய்ய வேண்டும். ஆளுநர் தேவையற்ற விஷயங்களை மக்களிடம் பேசி குழப்பம் செய்கிறார். கவுரம் மிக்க ஆளுநர் பதவியை காப்பாற்ற வேண்டும். அரசியல்வாதி போன்று செயல்படுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்த 20 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு இருக்கிறார்.

எல்லா மாநிலங்களில் பேசப்படுகிறது
மாநில அரசின் முடிவை தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். அமைச்சரவை தயாரித்த உரையில் உள்ள தகவல்களை வாசிப்பதை தவிர்த்ததால் அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அண்ணா வழியில் வந்தவர் முதல்வர். அவர் அப்படித்தான் எதிர்வினை ஆற்றுவார். தேர்ந்து எடுக்க அரசுக்கு துணை நிற்கவே வந்து இருக்கிறீர்கள். சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தத சம்பவம் எல்லா மாநிலங்களில் பேசப்படுகிறது. ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications