நான் எழுதிய புத்தகங்களை வாங்கி பரிசளிக்க வேண்டாம்... பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள்
நான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் அரசு சார்பில் வாங்கக் கூடாது என, தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்று தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இறையன்பு, நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள், இலக்கியத்தில் மேலாண்மை, ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்,படிப்பது சுகமே,சிற்பங்களைச் சிதைக்கலாமா,பணிப் பண்பாடு,ஆத்தங்கரை ஓரம், சாகாவரம், வாய்க்கால் மீன்கள், சின்னச் சின்ன வெளிச்சங்கள்,Steps to Super Student
என்பன உட்பட பல்வேறு தன்னம்பிக்கை புத்தகங்கள், வழிகாட்டி புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவரது நூல்களை பலரும் படித்து வருகின்றனர். தற்போது அவர் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இன்றைய தினம் வெ.இறையன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக தடுப்பூசிகள்
எழுதியது ஏன்
நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.
பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்
இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன்.
களங்கம் விளைவிக்கும்
எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது.
அரசு செலவில் வாங்க வேண்டாம்
அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.
பணம் வசூலிக்கப்படும்
இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.