நடிகைகள் பற்றி வாயை விட்ட டாக்டர் காந்தராஜ்.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பாக விசாரணைக்கு ஆஜர்
சென்னை: நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பாக விசாரணைக்காக டாக்டர் காந்தராஜ் நேரில் ஆஜரானார். நடிகை ரோகிணி அளித்த புகாரின் பேரில் காந்தராஜ், யூடியூபர் முக்தார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டாக்டர் காந்தராஜுக்கு கடந்த 17 ஆம் தேதி சம்மன் அளிக்கப்பட்டது.
நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "செப்டம்பர் 7-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பேசியுள்ள டாக்டர் காந்தராஜ், நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்று பேசியுள்ளதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

இதில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் டாக்டர்.காந்தராஜ் பேட்டி அளித்துள்ளார். மேடை நாகரிகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு மனதில் தோன்றியவற்றை எல்லாம் பேசியிருக்கிறார். அனைத்து நடிகைகளையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். எனவே டாக்டர் காந்தராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரி இருந்தார்.
இந்த புகாரை அடுத்து டாக்டர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகள் கீழ் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் காந்தராஜ், "தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் காந்தராஜை விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று, மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன்பாக விசாரணைக்காக டாக்டர் காந்தராஜ் இன்று நேரில் ஆஜரானார்.
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் கூறினர். இதுதொடர்பாக, யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு புகாரளிப்பதாக நடிகைகளை விமர்சித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications