அதிமுக - பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை.. பரிதவிப்பில் கிருஷ்ணசாமி.. முடிவில் உறுதியான எடப்பாடி
சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி முற்றுப் பெறவில்லை என புதிய தமிழகம் கிருஷ்ணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறுகையில், அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக- பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த நல்ல முடிவு வர வாய்ப்புள்ளது.

இப்போது கூட்டணி இல்லாவிட்டாலும் 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி புதுப்பிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக -பாஜக இடையே கூட்டணி முறிவானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்த நிலையில் அதிமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தன.
இந்த நிலையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அதிமுக பூத் தமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச் செயலாளரின் முடிவு அல்ல.
ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி தமிழக பாஜக தலைவரிடம் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் விசாரித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியை பாஜக புதுப்பித்தால்தான் கட்சிக்கு வளர்ச்சி என நிர்மலா சீதாராமன் அறிக்கையில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். அது போல் இது குறித்து திநகரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி கூறுகையில், அதிமுக- பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்கிறார். ஆனால் பாஜக தரப்பும் கிருஷ்ணசாமியும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றார். கூட்டணி முறிவதாக அறிவித்த போது நான் இரு தலைவர்களையும் சமாதானப்படுத்தி கூட்டணி உடையாமல் பார்த்துக் கொள்வேன் என கிருஷ்ணசாமி முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் பொதுக் கூட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே தொண்டர்களை பார்த்து "என்ன நீங்கள் நினைத்தது நடந்து விட்டது சந்தோஷம்தானே" என கேட்டார் எடப்பாடி! அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து சில விஷயங்களை பேசியிருந்தார். இந்த 2024 லோக்சபா தேர்தல் வரைக்கும் எடுத்த முடிவில் உறுதியாக எடப்பாடி இருக்கும் போது கிருஷ்ணசாமியோ பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூட்டணி முறியவில்லை என்றும் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications