30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்! விடைபெற்ற பசுமை புரட்சி நாயகன்
சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்பட அரசியல் தலைவர்கள், வேளாண் துறை சார்ந்த அறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல், நேற்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் ஆறுதலும் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்குப் பிறகு, தரமணியில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு மொத்தம் உள்ள 16 காவலர்களில் 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி முழு அரசு மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் செய்யப்பட்டது.
எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார் சுவாமிநாதன். சுவாமிநாதனின் தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராக வேண்டும் என்பது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. ஆனால், 1942ல் ஏற்பட்ட வங்கப் பஞ்சம் எம்.எஸ்.சுவாமிநாதனை மிகவும் கடுமையாக பாதித்தது. நாட்டின் உணவுப் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார்.
1960களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. உணவுப் பஞ்சத்தைப் போக்க அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், டபுள் மடங்கு லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதன்மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. இதனால் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications