சுனாமி போல கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்பு.. என்ன காரணம்?.. டாக்டர் பிரியா சம்பத்குமார் விளக்கம்
சென்னை: இந்தியாவில் கொரோனா 2-வது அலை ராக்கெட் வேகத்தில் சுனாமி போல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியர்கள் கைவிட்டதுதான் வீரியமான கொரோனாவின் தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்காவின் டாக்டர் பிரியா சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் மெயோ (Mayo Clinic) கிளினிக் தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சி பிரிவின் தலைவரான டாக்டர் பிரியா சம்பத்குமார் சன் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மு. குணசேகரனுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் டாக்டர் பிரியா சம்பத்குமார் கூறியதாவது:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இப்போது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ராக்கெட் வேகத்தில், சுனாமி போல கொரோனா பாதிப்பு இந்தியாவில் இருந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாக்டவுன் படுதீவிரமாக அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தனர். இதனால் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மிக குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2,3 மாதங்களாக நிலைமை வேறாக இருந்தது.
இந்தியர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை கடைபிடிப்பதை கைவிட்டுவிட்டனர். எங்கே சென்றாலும் கூட்டம் கூட்டமாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் ஒருசிலரது உடலில் தங்கி இருந்த கொரோனா வைரஸ் உருமாறி புதிய வீரியத்துடன் பரவத் தொடங்கிவிட்டது.
முன்பு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த குடும்பத்தையே தாக்குகிறது. ஒருவரிடம் இருந்து 2,3,4 அல்லது 9, 18 என பரந்துபட்டு பரவிக் கொண்டே செல்கிறது. அத்துடன் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகள் போதுமானதாகவும் இல்லாத நெருக்கடி. இதனால் கொரோனாவால் தற்போது இந்தியாவில் மரணங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறு டாக்டர் பிரியா சம்பத்குமார் தெரிவித்தார்.
சன் நியூஸ் டிவி சேனலுக்கு டாக்டர் பிரியா சம்பத்குமார் அளித்த நேர்காணல் முழுமையாக....












Click it and Unblock the Notifications