"அது" இல்லை.. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அந்த மழை பெய்யுதாம்.. டாக்டர் ராமதாஸ் கிண்டல்
ராமதாஸ் மதுமழை என்று ட்வீட் போட்டு கிண்டலடித்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் வெள்ளத்திற்கு காரணம் உள்ளாட்சி தேர்தலுக்கான மது மழை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்
முதற்கட்ட தேர்தல் கடந்த புதன்கிழமை நடந்து முடிந்தது.. அதேபோல் இன்றும் 2வது கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது...
ஆளும் கட்சியாக உள்ளதால், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக பிரச்சார களத்தில் செயல்பட்டது..

சறுக்கல்
பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அதிமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தவே, திமுக தீவிரமாக களப்பணியாற்றியது.. அதேபோல, அதிமுகவுக்கு இது முக்கியமான தேர்தலாகும்.. கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்ததால், இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வெல்ல களமிறங்கியது.

அச்சம்
இந்த தேர்தலிலும் வெற்றி பெறாவிட்டால், அதிமுக மீதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்ற அச்சமும் உள்ளதால், அதிமுக தலைவர்கள் பல பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், வேட்பாளர்கள் பலர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக செய்திகளும் கசிந்தன.. ஒருசில இடங்களில் 500 ரூபாயும், மேலும் பல இடங்களில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வரையும் தரப்பட்டுள்ளது...

சாலை மறியல்
வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சேலை வழங்கியதாக புகார் எழுந்தது.. திருப்பத்தூர் மாவட்டத்தில் காமாட்சி விளக்கு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.. நேற்றுகூட காஞ்சிபுரம் மாவட்டம் கொல்லச்சேரி ஊராட்சியில், இரவில் மின் இணைப்பு துண்டிக்க வைத்து வாக்காளர்களுக்கு திமுகவினர் மூக்குத்தி கொடுத்ததாக கூறி, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது..

மதுபானம்
அதேபோல, புதுவையிலிருந்து விழுப்புரத்துக்குக் கடத்திவரப்படும் மதுபானங்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்திருப்பதாக செய்திகள் வந்தன.. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முந்தைய 28 நாள்களில் 1,346 லிட்டர் புதுவை பாப்ஸ்கோ மதுபானங்களே சோதனையின்போது பிடிபட்டன. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 15 நாள்களில் மட்டும் 5,828 லிட்டர் புதுவை பாப்ஸ்கோ மதுபானங்கள் பிடிபட்டுள்ளதாக கூறப்பட்டன. மதுபான கடத்தல் அதிகமானது, உள்ளாட்சி தேர்தலுக்கான எதிரொலியா? என்ற கேள்வி எழுப்பப்பட்டன. இதைதான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டல் செய்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

மது ஒழிப்பு
அதில், "தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதற்கு காரணம் வடகிழக்கு பருவமழையோ, தென் மேற்கு பருவமழையோ அல்லவாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை தானாம்" என்று பதிவிட்டுள்ளார். பல வருடங்களாகவே மது ஒழிப்புக்கு எதிராகவும், நேரடியாகவும் போராடி வருபவர் டாக்டர் ராமதாஸ்.. அந்த வகையில், இந்த தேர்தலில் மது விற்பனை ஆறாக ஓடுவதை கிண்டலாக பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications