பேசாத பேச்சில்லை, திட்டாத வார்த்தையில்லை.. அவ்வளவும் செய்துவிட்டு அதிமுகவிடம் சரணடைந்த ராமதாஸ்!
இணையத்தில் டாக்டர் ராமதாஸ் ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
சென்னை: பேசாத பேச்சில்லை.. திட்டாத வார்த்தையில்லை.. அவ்வளவும் செய்துவிட்டு இன்று திரும்பவும் அதிமுக அணியிடமே கூட்டணி அமைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! இதுகுறித்து பாமகவை மரண கலாய் கலாய்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் அதிமுகவையும் விமர்சிப்பது, மறுபக்கம் திமுகவையும் கலாய்ப்பது, இதற்கு நடுவில் பாஜகவையும் வம்புக்கு இழுப்பது என ரவுண்டு கட்டி ட்வீட்கள், அறிக்கைகள் விட்டு கொண்டிருந்தார் ராமதாஸ்.
"ஊழல் வழக்குகளை உடைப்பதில் ஓ.பன்னீர்செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா" என்றார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல என்று அறிக்கை விட்டார். மேலும் எடப்பாடி அரசு எடுபிடி அரசு என்று விமர்சனம் செய்தார். இதனால் தனித்து நிற்பாரோ அல்லது 3-வது அணி தனது தலைமையில் உருவாக்குவாரோ என்று தூக்கி வைத்து பெரிய அளவில் அவரை கணித்தனர் தமிழக மக்கள்.
|
தூசு தட்டி ட்வீட்கள்
ஆனால் தான் எப்பவுமே ஒரே மாதிரிதான், மாறவே மாட்டேன் என்பதை இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து நிரூபித்துள்ளார் ராமதாஸ்! இதை சாணக்கியத்தனம் என்பதா, யுக்தி என்பதா, என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ராமதாஸ் அதிமுகவை விமர்சித்து போட்ட ட்வீட்களை எல்லாம் தூசி தட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
குட்கா ஊழல்
குட்கா ஊழல் சிபிஐ விசாரணைக்காக முன்வாசல் வழியாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், விசாரணை முடிந்து பின்வாசல் வழியாக வெளியேறினாராம். சிபிஐ அலுவலகத்துக்கு இரு வாசல்கள் இருக்கலாம். ஆனால், விரைவில் செல்லவிருக்கும் சிறைக்கு?
|
பினாமி ஆட்சி
சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு 89% ஆதரவு. 11% மட்டுமே எதிர்ப்பு: எடப்பாடி பழனிச்சாமி - வேதனைகளை சாதனைகள் என்று சொல்வதும், எதிர்ப்பை ஆதரவாகக் காட்டுவதும் நமது பினாமி ஆட்சியாளர்களுக்கு சகஜம் தானே?
|
விட்டு வைக்காத டாக்டர்
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், இருக்கும் அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்பட்டு வரும் செங்கோட்டையனைகூட ராமதாஸ் விட்டு வைக்கவில்லை.
"ஜோரா கைத்தட்டுங்க!
‘வகுப்பறைகளில் மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால், அதன் ஓசையால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படும்; படிப்பு பாதிக்கப்படும். அதேநேரத்தில் மாணவிகள் தலையில் பூ வைப்பதால் மாணவர்களின் கவனம் திசை திரும்பாது.அதற்கு ஆட்சேபனை இல்லை'-செங்கோட்டையன், பள்ளிக்கல்வி அமைச்சர்" என்று பதிவிட்டுள்ளார்.
|
வைரல் அறிக்கை
கடந்த 2 ஆண்டுகளில் டாக்டர் ராமதாஸ் அதிகமாக விமர்சித்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பதை நம்பித்தான்ஆக வேண்டும். குறிப்பாக கஜா புயலின்போது முதல்வரை ட்விட்ரிலேயே காய்ச்சி எடுத்திருக்கிறார் டாக்டர். ஆனால் இது எல்லாவற்றையும்விட நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருவது என்ன தெரியுமா? கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தாரே.. அந்தஅறிக்கைதான் இணையத்தில் ஸ்பீடு எடுத்து வருகிறது.
|
எதிர்பாராதது
ராமதாஸ் அன்று எடப்பாடி பழனிசாமி முதல், அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம், என ஒருவரையும் விட்டு வைக்காமல் கலாய்த்து போட்ட ட்வீட்கள் எல்லாம் இன்று தனக்கு எதிராகவே திரும்பும் என்பதை ராமதாஸே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.