உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் 30 மாற்றுத் திறனாளிகள்.. இந்தியாவின் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தேர்வு
சென்னை: இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தாக்கத்தை ஏற்படுத்தும் டாப் 30 மாற்றுத்திறனாளிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு (ஏடிஏ) இப்போது வயது 31. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் உலகளாவிய நிறுவனமான டைவர்சபிலிட்டி (DIVERSABILITY), உலகளாவிய அளவில், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், 2001ம் ஆண்டுக்கான, 30 மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
13 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பரிசீலிக்கப்பட்டு 30 பேர் தேர்வாகியுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தாஸ்குப்தா ஒருவராகும்.
உலகளவில் தங்களது தனித்துவமான செயல்பாடுகளால், தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றுத் திறனாளிகள்தான் டி-30 என்று அழைக்கப்படக் கூடிய டாப் 30 மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த சாய் தாஸ்குப்தாவிற்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இதன் மூலம், உலக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகாரம், தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் காரணியாக சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா மாறியுள்ளார்.
டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா ஒரு (Osteogenesis Imperfecta) போராளி. பல லட்சம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவர். அவர் தனது விருப்பங்களை நோக்கி உழைப்பதிலும், மனிதகுலத்தை ஒளிரச் செய்ய வேண்டும் என்பதிலும் மிகவும் உறுதியாக இருக்கிறார். சாத்தியமில்லாதது எதுவும் இல்லை என்பதை தனது வாழ்க்கையின் மூலம் டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா நிரூபித்து வருகிறார்.
டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா, உடையக்கூடிய எலும்பு நோய் என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 90% உடல் வெளியுறுப்புகள் செயலிழந்த நிலையில் இருந்தபோதிலும், அவர் தனது செயல்பாடுகளை பலவீனமாக்க விட்டதில்லை. ஆம்.. நிறைய திறமைகளை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு விடா முயற்சிக்காரர்தான் இந்த டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா.
இவர் ஒரு வெற்றிகரமான கிராபிக்ஸ் டிசைனர், உலகளாவிய மோட்டிவேஷனல் பேச்சாளர், நல்லெண்ண தூதர் மற்றும் சர்டிபிகேட் பெற்ற ஹேப்பினஸ் பயிற்சியாளர். இது மட்டுமா 15 லிம்கா உலக சாதனைகளை இதுவரை அவர் படைத்துள்ளார் என்றால் உங்களுக்கு புதிய தகவலாக இருக்கக் கூடும். ஆனால், தனது விடா முயற்சியால், இதை சாத்தியப்படுத்தியுள்ளார். யாருக்கெல்லாம் உரிய வசதிகள் கிடைக்கவில்லையோ அவர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறார்.
டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தனது ஹேப்பினஸ் பயிற்சி மூலம், பல லட்சம் மக்களை அதிலும் குறிப்பாக, உலகளாவிய தலைவர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், கார்ப்பரேட்கள், தன் பாலின விரும்பிகள், ஏழை குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை சந்தித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
படைப்பு திறன்கள் மற்றும் அறிவை பயன்படுத்தி பலதரப்பட்ட சமூகங்களையும் வாழ்க்கையில் சிறந்து விளங்க ஊக்குவித்தார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகை மக்களுடன் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா கலந்துரையாடியுள்ளார். குறை சொல்லி புலம்புவதற்கு உங்களுக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதே உண்மையான மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான திறவுகோல் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் உலகிற்கு உணர்த்தி உத்வேகம் அளித்து வருகிரார் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா. கஷ்டங்களை தாங்குவது மற்றும் அனைத்து எதிர்மறை அம்சங்களையும், நேர்மறை விஷயங்களை கொண்டு நிரப்புவது போன்ற செயல்பாடுகள்தான் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தாவை சிறப்பான தனித்துவம் கொண்ட முன்னுதாரண புருஷராக காட்டுகிறது.
2021 டி -30 மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய நாடுகள் சபையால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சிக்கான குறிக்கோளை நிறைவேற்ற இனி சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா பங்களிப்பு செய்ய முடியும். இந்த பணியில் அவர், உலகின் பல மாற்றுத்திறனாளி தலைவர்களுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளின் பெருமைகளை உயர்த்த முடியும்.
தாக்கத்தை ஏற்படுத்தும், டி-30 மாற்றுத்திறனாளிகள் குறித்த மேலதிக தகவல்களுக்கு, இதை பார்க்கலாம், https://mydiversability.com/2021-d30