டாக்டர் சங்கவி ரியல் இன்ஸ்பிரேசன்.. விஜய் டிவி நீயா நானா காணொளியால் நெகிழ்ந்த ஐஎப்எஸ் அதிகாரி
சென்னை: கல்வி தான் சிறந்த செல்வம் என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் டிவி நீயா நானா காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ஐஎப்எஸ் அதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன் நெகிழ்ந்து போய் பதிவிட்டிருக்கிறார்.
சங்கவி என்ற பெண் அரசு பள்ளியில் படித்தார்..அவர் விஜய் டிவி நீயா நானா விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், நான் பிளஸ் 2வில் 1149 மார்க் எடுத்துள்ளேன். என் அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். என் அம்மா பீடி சுற்றுகிறார்.. வாரம் முழுக்க வேலை பார்த்தாலும் அம்மாவிற்கு 300 ரூபாய் தான் கிடைக்கும். அம்மாவிற்கு வேலையில் உதவி செய்வேன். எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என் கட் ஆப் மார்க் 196. 25 எடுத்துள்ளேன்.. ஆனால் வேண்டிய கட் ஆப் மார்க் 198க்கு மேலே வேண்டும் என்கிறார்கள் என்பார்.

ஆனால் சங்கவி சரியாக ஐந்து வருடத்தில் டாக்டர் ஆகி அதே நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கோபிநாத் அவரை அழைத்து கௌரவித்து கல்வியின் அருமையை உணர்த்துவார். அப்போது டாக்டர் சங்கவியிடம் கோபிநாத் கேட்பார். இவ்வளவு சிரமத்திலும் டாக்டர் ஆக வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள் என்று கேட்டார்..
அப்போது சங்கவி கூறுகையில், ஏனெனில் படிப்பு ஒன்று மட்டும் தான் சார் எல்லாத்துக்குமே கிடைக்கிறது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் படிப்பு ஒன்று தான். படித்தால் மட்டும் தான் ஒரு குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும்.. என்னோட குடும்பத்தை நான் ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இப்பவும் நான் சொல்வேன்.- படித்ததால் மட்டும் தான் என் குடும்பம் நன்றாக இருக்கிறது" என்று டாக்டர் சங்கவி கூறுவார். இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சென்னையைச் சேர்ந்தவரும் அஜர்பைஜானில் பணியாற்றும் இந்தியாவின் ஐஎப்எஸ் அதிகாரியுமான ஸ்ரீதரன் மதுசூதனன் பயணி தரன் என்ற புனைப்பெயரில் சமூக ஊடகங்களில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அவர் நீயா நானா காணொளியை பார்த்து நெகிழ்ந்து வெளியிட்ட பதிவினை இப்போது பார்ப்போம்
💡✨ இந்தக் காணொளியை மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும் சிறுகதை மாதிரி இருக்கும்.
— 🚶🏽பயணி தரன் (@PayaniDharan) January 28, 2024
டீக்கடையில் வேலை பார்க்கும் அப்பா; பீடி சுற்றும் வேலைக்குப் போகும் அம்மா. அங்கே இலை வெட்டும் வேலைக்கும் போகும் மகள். இந்த ஏழைக் குடும்பத்தில் வளர்ந்த… pic.twitter.com/d6NB4x3JCT
"இந்தக் காணொளியை மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும் சிறுகதை மாதிரி இருக்கும்.
டீக்கடையில் வேலை பார்க்கும் அப்பா; பீடி சுற்றும் வேலைக்குப் போகும் அம்மா. அங்கே இலை வெட்டும் வேலைக்கும் போகும் மகள். இந்த ஏழைக் குடும்பத்தில் வளர்ந்த அந்தப் பெண், இடையூறுகளைக் கடந்து நன்கு படித்து, பள்ளித் தேர்வில் அருமையான மதிப்பெண்கள் பெறுகிறாள். மருத்துவராக விரும்புவதாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்கிறாள்.
சில வருடங்களுக்குப் பிறகு, அவளே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மருத்துவராகக் கலந்து கொள்கிறாள். அவள் சொன்ன வார்த்தைகள்?: "கல்வி தான் உண்மையான சக்தி, தனிநபருக்கும் குடும்பத்திற்கும்." இவ்வாறு நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications