சு.சாமி பேச்சு, சந்தேகமாக இருக்கிறது.. முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்.. சுப.வீ பரபர!
சென்னை : திமுகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்துள்ள நிலையில், முதலமைச்சரை காவல்துறையினர் பாதுகாப்பாக காக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன் என திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்ததிலிருந்து பிராமணர்களுக்கு எதிராக அக்கட்சி செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், திமுகவின் சின்னமான உதயசூரியனை முடக்குவதோடு, அக்கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில், "தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான தி.மு.க.வின் செயலாளர் ஒருவர், பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலை அச்சுறுத்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும், தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகளையும் மீறும் செயல் என்று முதன்மையான பார்வைக்கு எடுத்துக் கொண்டால், நான் மகிழ்ச்சியடைவேன்." என குறிப்பிட்டிருந்தார்.

சுப.வீரபாண்டியன் கருத்து
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள சுப. வீரபாண்டியன், "பிராமணர்கள் வாக்களிக்காததால் தான் திமுக வெற்றி பெற்றதாக சுப்பிரமணியன் சுவாமி சொல்லி இருக்கிறார். ஆனால் பிராமணர்கள் வாக்களித்த போதெல்லாம் திமுக தோற்றுவிட்டதா. உள்ளாட்சித் தேர்தலின் போதெல்லாம் பிராமணர்கள் வாக்களிக்கவே இல்லையா. எந்த உண்மையும் இல்லாமல் எந்த தர்க்கமும் இல்லாமல் எந்த நடைமுறை இல்லாமல் ஒருவர் பேசினால் அவரை மனநல மருத்துவரிடம் தான் கொண்டு செல்ல வேண்டும்.

அச்சமாக உள்ளது
சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் வெளியே திரிவது நாட்டுக்கு நல்லதல்ல. அவரை கைது செய்து நல்ல மனநல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. ஏதோ ஒரு வேலை நடக்கிறது. நேர்மையாக மக்களை சந்தித்து இவர்களால் வெற்றி பெற முடியாது. இன்றைக்கு தமிழக முதல்வருக்கு இருக்கிற செல்வாக்கை பார்த்து அச்சப்பட்டு என்ன கருதுகிறார்கள் என்றால் இனிமேல் நேர்மையான வழியில் இவர்களை சந்திக்க முடியாது. வேறு ஏதோ திட்டம் நடக்கிறது. எனக்கு அச்சமாக இருக்கிறது.

முதல்வரை காக்க வேண்டும்
இவர்கள் எந்த பழி பாவங்களுக்கும் அஞ்சாதவர்கள். நான் விரிவாகச் சொல்லவில்லை சுருக்கமாகவே சொல்கிறேன். முதலமைச்சரை காவல்துறையினர் பாதுகாப்பாக காக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் எதை வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி மீதான சந்தேகம் இன்னும் துடைக்கப்படவில்லை. இப்போதாவது அவரை கைது செய்ய வேண்டும் இல்லை. ஏனென்றால் நாட்டில் ஆபத்துகளை வித்திடும் நபராக சுப்பிரமணியன் சுவாமி இருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications