தி.க தலைவர் கி.வீரமணி பிறந்தநாள்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. சளைக்காத போராளி என புகழாரம்!
சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது 89-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அவரது பிறந்த நாள் விழா நடந்து வருகிறது. கி.வீரமணி பிறந்தநாளையொட்டி வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள கி.வீரமணி வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். முதல்வருடன் சென்ற பல்வேறு அமைச்சர்களும் வாழ்த்துக்களை கூறினார்கள்.

இந்த நிலையில் சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி தி.க. தலைவர் வீரமணி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி.
முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி. 11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர்.
தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications