“திராவிட அரசன் ஸ்டாலின்.. இன்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஹாட் டாபிக் இதான்” - அன்பில் மகேஷ் பேச்சு
சென்னை : திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் புதிய தனியார் பள்ளி திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிப்பெண் அடிப்படையில் எடை போடாமல் மாணவர்களின் தனி திறமையை கவனிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

திராவிட அரசன்
பள்ளி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வர் ஸ்டாலினை வரவேற்றுப் பேசுகையில், திராவிட மாடல் பேரரசின் ராஜா எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடிக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது எனத் தெரிவித்தார்.

நிதி நெருக்கடிக்கு மத்தியிலும்
இந்தியாவின் ஜிடிபியில் 6 சதவீத ஜிடிபி பங்களிப்பு தரும் தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். நிதி நெருக்கடியிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 36,895 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று சொன்னால் அதுதான் திராவிட மாடல் என அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

மாடர்ன் தமிழ்நாட்டின் கிரியேட்டர்
மேலும், நவீன தமிழ்நாட்டின் தந்தை என கருணாநிதியைச் சொல்வோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தனது கொள்கையில் எந்தவித சமரசமுமின்றி தமிழகத்தை முன்னேற்றுவதற்காக உழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை Creator of modern tamilnadu என பெருமையாக அழைக்கலாம். அந்த அளவிற்கு இன்று உழைத்து வருகிறார் ஸ்டாலின் என முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நான் முதல்வன்
மேலும் பேசிய அமைச்சர் மகேஷ், அனைத்திற்கும் அடிப்படை பள்ளிக்கல்விதான். பள்ளியே கோயில், அதில் பயிலும் மாணவர்களே தெய்வம் என்று முதல்வர் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகிறார். மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து எடைபோடாமல் , அவர்களது தனித்திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் அரசு ஈடுபடும். அதற்காகவே 'நான் முதல்வன்' தொடங்கி நடைபெற்று வருகிறது. அறம் சார்ந்த கல்வி முறையை உருவாக்கி, மாணவர்கள் படித்து முடித்த பிறகு பொருள் ஈட்டவும் உதவும் விதமானதாக கல்வி இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications