பாஜகவுடன் திமுக சமரசமா?ஆணித்தரமான மறுப்பு சொல்லாத முதல்வர் ஸ்டாலின்- திராவிட சப்போர்ட்டர்ஸ் அப்செட்?
சென்னை: பாஜகவுடன் திமுக சமரசமான போக்கை கடைபிடிக்கிறதா? என்ற கேள்விக்கு ஆணித்தரமான மறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்.
தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தொடக்கம் முதலே திராவிடர் இயக்க கொள்கைகளை பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தி வருகிறார். அனைத்து ஜாதியினர் அர்ச்சகாரதல் தொடங்கி பல அறிவிப்புகளை சொல்லலாம்.

காட்டம் காட்டிய முதல்வர் ஸ்டாலின்
அதேபோல் இந்தி திணிப்பு விவகாரத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்; மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார்; டெல்லி செல்வது என்பது காவடி தூக்கவா? என காட்டமாக கேள்வி கேட்கிறார். இதன் உச்சமாக அனைவருக்குமான திராவிட மாடல் அரசு இதுதான் என பிரகடனம் செய்கிறார். இத்தனையும் திமுக அரசாங்கத்தை முற்று முழுவதுமாக ஆதரிக்கும் திராவிடர் இயக்கத்தாரை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது என்பது மிகையல்ல.

ஆர்.எஸ்.எஸ். விவகாரமும் திமுக அரசும்
அதேநேரத்தில் பாஜகவின் மிக கடுமையான, பொய்யான, இழிவான பல விமர்சனங்களுக்கு திமுக தரப்பில் காட்டமான பதில் தரப்படவில்ல; அவதூறுகளுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் இல்லை. பெயரளவிற்கு ஒரு சில பாஜக முகம் தெரியாதவர்கள் மீது வழக்குகள்பாய்ந்திருக்கின்றன என்ற ஆதங்கமும் திராவிடர் இயக்கத்தாரிடம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு அனுமதி தரும் விவகாரத்தில் ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையில் திமுக அரசு வியூகத்துடன் நடவடிக்கை மேற்கொண்டது; ஆனால் பொதுவில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தமிழக அரசு சிக்னல் கொடுத்ததாக ஒரு தோற்றம் உருவானது தவிர்க்க முடியாததானது.

பாஜகவுடன் சமரசமா?
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற கேள்வி நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒரு கேள்வி, பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசமாகப் போய்விட்டதாகச் சிலர் சொல்கிறார்களே? என்பது. இந்த கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: இப்படிச் சொல்லுவதை பா.ஜ.க.வே ஏற்றுக்கொள்ளாது!.

திராவிடர் இயக்க ஆதரவாளர்கள் கருத்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பதில் திராவிடர் இயக்கத்தாரிடையே ஏமாற்றத்தைத் தந்திருக்கிறதாம். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பாஜகவுடன் எந்த காலத்திலும் எந்த சூழலிலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை சமரசமும் இல்லை என ஆணித்தரமாக பதில் சொல்லி வந்திருக்கலாம். அப்படி சொல்வதன் மூலமே பாஜகவினரின் வாயடைக்க முடியும்; இல்லை எனில் எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது என்கிற அவதூறான பாஜகவின் பிரசாரம் தொடரவே செய்யும்; பாஜகவை கண்டு திமுக அஞ்சிவிட்டது என்கிற இழிவான விமர்சனமும் நீடிக்கும் என்கின்றனர் மூத்த திராவிடர் இயக்கத்தினர்.












Click it and Unblock the Notifications