பிராமணர்கள் போராட்டத்துக்கு பதிலடியாக திராவிடர்கள் வருணாசிரம எதிர்ப்பு போராட்டம்-பரபரத்த சென்னை!
சென்னை: சென்னை: பிராமணர்கள் சமூகம் மீதான அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க கோரியும் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பிராமணர்கள் சமூகம் மற்றும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பதிலடியாக அதே இடத்தில் நேற்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பாக 'திராவிடர் எழுச்சி- வருணாசிரமம் (வர்ணாசிரமம்)(சனாதனம்) (மனு தர்மம்) எதிர்ப்பு' ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தி பேசுதல், பூணூல் அறுத்தல் உள்ளிட்டவைகளைத் தடுக்க தலித்துகளுக்கு பாதுகாப்பு தரக் கூடிய பிசிஆர் சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று பிராமணர் சமூகத்தினர் மற்றும் பல்வேறு ஜாதி, மதத் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்ம், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், நடிகை கஸ்தூரி, பாஜக மதுவந்தி, வேலூர் இப்ராஹிம், காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பிராமணர்களை இழிவுபடுத்தும் திமுகவினர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாஜகவின் மதுவந்தி, அமரன் திரைப்படத்தில் அவ்வளவு பெரிய ராணுவ வீரரை பிராமணர் என காட்டுவதற்கு உங்களுக்கு என்ன கேடு வந்துவிட்டது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இக்கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
பிராமணர்கள் பாதுகாப்பிற்காக. புதிய பிசிஆர் சட்டம் கொண்டு வர கோரி பேரணி... pic.twitter.com/0Dnv8RSWpd
— Maha Simha. (@maha_simha) November 3, 2024
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலடியாக அதே ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பாக 'திராவிடர் எழுச்சி- வருணாசிரம- மனு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னையில் ஒரே நாளில் பிராமணர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் போராட்டம் நடத்தியதால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications