இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. சுதாரித்தால் நல்லது!
அன்று விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக இன்று பலமிழந்து வருகிறது.
Recommended Video

சென்னை: ஒரு கட்சி நம் கண்ணெதிரே விதையாகி வளர்ந்து விருட்சமாகி.. இறுதியில் பட்டு போவதையும் நாம் பார்க்கிறோம் என்றால் அது தேமுதிகதான்... இதற்கெல்லாம் யார் காரணம் என்றால் தேமுதிகவேதான்!
கட்சி ஆரம்பித்தபோதும், தேர்தலில் தனித்து நின்ற போதும், பல்வேறு தரப்பினராலும் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் விஜயகாந்த். திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டுப்போட்ட விரக்தியில் இருந்த மக்களுக்கு விஜயகாந்த் ஒரு மாற்று சக்தியாக தென்பட்டார்.
அதனால்தான் 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அன்று அவரது அணுகுமுறையும் நடைமுறையும் மிகவும் பக்குவமாக இருந்தது. அதற்கு காரணம் ஒருவேளை அப்போது உடனிருந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் வழிகாட்டுதலாக கூட இருக்கலாம்.

பாதி பலம்
எப்போது பண்ருட்டியை பகைத்து கொண்டார்களோ அப்போதே தேமுதிக பாதி பலம் குறைந்தது. இதன்பிறகு வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் இவர்கள் எல்லாம் தேமுதிகவில் இருந்து வெளியே வந்தார்களோ அப்போது மீதியும் போய்விட்டது. அதற்கு பிறகு கட்சி வளரவே இல்லை. அந்த கட்சி யாரையும் வளர்க்கவும் இல்லை. குடும்ப ரீதியான தலையீடுகளால் இன்று வரை அக்கட்சியால் எழ முடியவில்லை என்பதுதான் உண்மை.

உடல்நலம்
விஜயகாந்த் நன்றாக இருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. ஆனால் அவர் இல்லாமல் பார்த்தால், அந்த கட்சியில் வேறு யாரும் நல்ல தலைவர்கள் இல்லை, உறுதியான முடிவுகளை எடுக்க நல்ல குழு இல்லை. கட்சியை வழி நடத்தி செல்ல மூத்த தலைவர்கள் இல்லை.

விஜயகாந்த் மகன்
பொருளாளர் என்ற போர்வையில் பிரேமலதா பேசுவதைக் கூட கேட்க முடிகிறது. அவரது பேச்சில் ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால் விஜயகாந்த்தின் மகன் பேசுவதெல்லாம்.. ரொம்ப டூ மச் ஓவர் ரகமாக இருக்கிறது. அதிலும், விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரிக்க வந்த தலைவர்களை அவன் இவன், ஏண்டா வீடு தேடி வர்றீங்க என்று பேசுவதை யாரும் ரசிக்க முடியாது.

முதிர்ச்சியின்மை
தேமுதிக ஒரு அரசியல் கட்டமைப்புடன் இப்போது இல்லை. நல்ல தலைவர்கள் அங்கு இல்லை. அரசியல் பக்குவம் குறைவானவர்கள்தான் நிறைய உள்ளனர் சுதீஷ் உட்பட! ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை கூட இவர்களால் இன்று நடத்த முடியாததே இவர்களின் முதிர்ச்சியின்மைக்கு சிறந்த உதாரணம்.

துரைமுருகன்
எதற்காக திமுக-தேமுதிக சந்திப்பு நடந்தது என்ற கேள்விக்கு நேரடியான தெளிவான பதிலை அக்கட்சியில் உள்ள அனகாபுத்தூர் முருகேசன், இளங்கோவனால் சொல்ல முடியவில்லை. மாறாக அசிங்கமாக போய் விடும் என்று பேசி தனது கோபத்தை வெளிக்காட்டிச் சென்றார் சுதீஷ். இதே கேள்விதான் துரைமுருகனிடத்திலும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் யாரையுமே அசிங்கமோ, அவமானமோ படுத்தாமல் சொன்ன பதில்தான் முதிர்ச்சி அரசியல்.

நிர்வாகிகள் யார்?
இவ்வளவு குறைகளையும் ஒரு கட்சி வைத்திருப்பது சரிதானா? விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக மற்றவர்கள் எவ்வளவுதான் பார்ப்பார்கள்? ஒரு கட்சிக்கான கட்டுக்கோப்பையும் இழந்து காணப்படுகிறது தேமுதிக. விஜயகாந்த் வீட்டுக்கு கூட்டணி தொடர்பாக தலைவர்கள் சென்றபோதும் சரி, மற்ற இடங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதும் சரி, பிரேமலதா, சுதீஷ் தவிர வேறு யாராவது நிர்வாகிகள் அங்கு இருந்தார்களா? இப்படி முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் இவர்களாகவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் அந்த கட்சியை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? நாலு பேருக்கு இவர்கள் நிர்வாகிகள் என்று சொல்லி உட்கார வைத்தால்தானே அவர்களை ஜனங்களுக்கு தெரியவரும்?

களப்பணி அவசியம்
இப்படி எல்லா பக்கமும் அரசியல் லட்சணங்களை இழந்து கிடக்கிறது ஒரு அரசியல் கட்சி. இனி இக்கட்சி எப்போது மீண்டெழும் தெரியாது. விஜயகாந்த்தும் முன்பு போல் ஓடியாடி உழைக்க முடியாது. ஆனால் கட்சி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வலுப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளது. அதற்கு களப்பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வித்தியாசமான விஜயகாந்த்
ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தொண்டர்கள் கொஞ்சம் தேமுதிக பக்கம் இருக்கிறார்கள். இந்த சாதகமான ஒரு அம்சத்தை விதையாக போட்டு திரும்பவும் விருட்சமாக்க தேமுதிக தலைமை வரவேண்டும். கேமராவுக்கு முன்னால் என்றோ, மக்களுக்கு முன்னால் என்றோ விஜயகாந்த்து கிடையாது. எல்லா பக்கமும் விஜயகாந்த் ஒன்றேதான்.. ஒரே குணம்.. ஒரே பேச்சு!! இது அரசியலுக்கு அப்பாற்பட்டு கிடக்கும் அரிய இயல்பு. பாவனை செய்யும் அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டதால்தான் தேமுதிக தொண்டர்கள் இன்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்! அதுவும் விஜயகாந்த்துக்காக மட்டும்தான்!!
புரிஞ்சா சரி!












Click it and Unblock the Notifications