டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி - முல்லாதோட்டம் வரை சோதனை ஓட்டம் வெற்றி
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிமீ தூரத்துக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவது புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் சேவை தான். மெட்ரோ ரயில்களில் சென்னையில் நாள்தோறும் சுமார் 3.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 116 கிலோமீட்டருக்கு 3 வழித் தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த தடத்தில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சோதனை ஓட்டத்துக்கு முன்னதாக அந்த வழித்தடத்தில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாலை 4.30 மணிக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால், மாலை 6 மணி வரை சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.
பின்னர், இந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது. ஆனால், ரயில் வருவதற்கு முன்பே தண்டவாள மின் வயரில் திடீரென அறுந்து விழுந்தன. ரயில் பாதை அருகில் இருந்த மின் விநியோக பெட்டிகளும் வெடித்துச் சிதறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் தண்டவாளத்தில் அறுந்து விழுந்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, சுமார் 4 மணி நேரத்துக்குப் பின்னர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பூந்தமல்லி முதல் முல்லா தோட்டம் வரையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications