ரயில் பயணிகள் கவனத்திற்கு... ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்... கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்..!
சென்னை: சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு தங்களிடம் இருந்து வராத வரை அது குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில், நேற்றைய தினம் எங்களுக்கும் உங்களுக்கும் கடினமான நாளாக அமைந்திருந்தது என்றும் ரயில் சேவை தொடர்பாக ஏராளமான கேள்விகள் வந்ததால் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தங்களால் விளக்கம் அளிக்க முடியாத சூழல் உருவானதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகளில் மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை உடனே அறிந்துகொள்ள தொடர்ந்து சென்னை கோட்ட ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கங்களை பின் தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை கொருக்குப்பேட்டை ரயில்நிலையத்தை தவிர மற்ற ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை என்றும் இதனால் புறநகர் ரயில்கள் மெதுவாக வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் சிறிது கால தாமதம் ஏற்படக் கூடும் என்ற தகவலையும் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரயில்களின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தாங்கள் அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், ரயில்கள் வழக்கமான முறையில் இயங்கும் என்று அர்த்தம் எனக் குறிப்பிட்டுள்ளார். வட இந்திய மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் மட்டும் சிறிது காலதாமதமாக புறப்படக் கூடும் என்று கூறியுள்ள அவர், ரயில்களின் நேரம் மாற்றம் தொடர்பான அனைத்து தகவல்களை தங்களால் இயன்ற வரை பயணிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் எனினும் தங்கள் கட்டுப்பாட்டை மீறிய ஒரு சில காரணங்களால் முழுமையாக இந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை எனவும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை -செங்கல்பட்டு இடையேயான அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் என்பதை மீண்டும் ஒரு முறை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் அறிவித்துக்கொள்வதாகவும் எண்ணிக்கையில் அடங்காத வகையில் விசாரணை அழைப்புகள் வருவதால் தனிதனித்தனியாக தங்களால் பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மின்சார ரயில்கள் இயக்கப்படுமா இயக்கப்படாத என்ற சந்தேகத்தில் இருந்த பலருக்கும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளரின் இந்த அறிவிப்பு குழப்பத்தை நீக்கியிருக்கக் கூடும். சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மின்சார ரயில்களில் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications