சென்னையில் குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் கோர விபத்து.. 2 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
சென்னை: வில்லிவாக்கத்தில் இன்று காலை குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரில் இன்று காலை இன்னோவா கார் ஒன்று அசுர வேகத்தில் தறிகெட்டு வந்து கொண்டிருந்தது. திடீரென அங்கிருந்த மின் கம்பத்தின் மீது அந்தக் கார் மோதியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டி அருகில் சென்று பார்த்தார். அப்போது எதிர்பாரதவிதமாக, ரிவர்சில் வந்த கார், சரோஜா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரோஜா உயிரிழந்தார்.
புற்றுநோயை கண்டறியும் மையங்கள் இன்னும் அதிகம் திறக்கப்பட வேண்டும்.. மருத்துவர்கள் கருத்து
பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
இதைத்தொடர்ந்து தெருவுக்குள் நுழைந்த அந்த கார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆதிலட்சுமி, மோகன கோபால் ஆகியோர் மீதும் மின்னல் வேகத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இருவர் மீதும் மோதும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
மடக்கிப்பிடித்த மக்கள்
இந்த விபத்தில் மோகன கோபால் சம்பவ இடத்தில் பலியானார். ஆதிலட்சுமி என்பவருக்கு கால் முறிந்தது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி இரண்டு உயிர்களை பலிவாங்கிவிட்டு நிற்காமல் சென்ற அந்த காரை அப்பகுதி மக்கள் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
மண்ணடி தேவேந்திரன்
பின்னர் மதுபோதையில் இருந்த காரின் ஒட்டுநரை வெளுத்து பின்னர் வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் குடித்து விட்டு காரை ஓட்டி 2 பேரின் உயிரை குடித்த அந்த நபர் மண்ணடியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
அவரை கைது செய்த போலீசார் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது, விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலையிலேயே நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.