''சசிகலாவை வரவேற்க போலீஸ் அனுமதி கிடைச்சாச்சு''... மகிழ்ச்சியில் திளைக்கும் டி.டி.வி தினகரன்!
சென்னை: சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரை ராணுவ கட்டுப்பாட்டோடு சசிகலாவை வரவேற்போம் என்று தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர்கள் பரபரப்பு புகார்
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; இந்த பழியை அதிமுக மீது போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்; ஆகையால் இதனை தடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.
காவல்துறை அனுமதி
ஆனால் இதனை மறுத்த டி.டி.வி தினகரன் இவர்களே ஏதாவது செய்து விட்டு, எங்கள் மீது பழியை போட பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது:- சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவை வரவேற்க அனுமதி கிடைத்துள்ளது. சசிகலாவை வரவேற்க நடக்கும் ஏற்பாடுகளை பார்த்து அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.
உணர்வுரீதியிலான பாசம்
சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ளவர்களே மக்களுக்கு பீதியை ஏற்படுத்துகின்றனர். மக்களுக்கு பீதியை ஏற்படுத்த்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். எங்க அப்பன் குதிரைக்குள் இல்லை என்று இவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு எதாவது செய்து அம்மாவின் உண்மை தொண்டர்கள் மீது பழி போட சாதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உண்மை தொண்டர்கள் உணர்வுரீதியில் காட்டும் பாசமெல்லாம் கூலிக்கு ஆட்களை திரட்டுபவர்களுக்கு புரியாது.
ராணுவ கட்டுப்பாட்டு வேண்டும்
யாரால் அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள். சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்து கொள்ள வேண்டும். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரை ராணுவ கட்டுப்பாட்டோடு சசிகலாவை வரவேற்போம். இதனால் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது. வரவேற்பின்பொது கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் கூறினார்.