வருமான வரி தேடி வரும்... வீடு விற்பனை பதிவு முறை மாற்றத்தால் புதிய சிக்கல்?
சென்னை: பொது அதிகார அடிப்படையில் நிலம் பெற்ற கட்டுமான நிறுவனங்கள், வீடு விற்பனை செய்வதில் சில நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நில உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுக்குமாடி திட்டத்தை பொறுத்தவரை, கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புதிய நடைமுறை கடந்த 2023 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. இதன்படி வீடு வாங்கும் பொதுமக்கள் வசதிக்காக முத்திரைத்தீர்வை குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பிரிக்கப்படாத பாக மனை நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஆகிய இரண்டுக்குமான மொத்த மதிப்பினைக் கணக்கிட்டு ரூ.50 லட்சம் வரை மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோல் ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் மற்றும் ரூ.3 கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை வரியும், 2 சதவீதம் பதிவுக்கட்டணமும் என ஏற்கெனவே உள்ள நடைமுறையில் செலுத்தி பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படியே கடந்த டிசம்பர் முதல் தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்துக்கு தனியாகவும், கட்டடத்துக்கு தனியாகவும் பத்திரம் பதிவு செய்யப்பட்ட நடைமுறை ரத்து செய்து செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் முதல் நிலம், கட்டடம் ஆகியவற்றுக்கு சேர்த்து, கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் முறை தான் அமலில் இருக்கிறது.
இதில் தெரு அடிப்படையில் மூன்று வகைகளில், இந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கட்டுமான துறையினரின் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் முறைகள் மாற்றப்பட்டது. இதன்படி, சர்வே எண் அடிப்படையிலான வேறுபாடுகளையும் கருத்தில் வைத்து, கூட்டு மதிப்பு வீடுகளுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படியே அடுக்குமாடி திட்ட வீடுகள் விற்பனை பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பொது அதிகார அடிப்படையில் நிலம் பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீடு விற்பனை செய்வதில் சில நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை நில உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. என்ன நடைமுறை சிக்கல் என்றால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள் நிலத்தை கிரையமாக பெறுவதில்லை.
நில உரிமையாளரிடம் இருந்து, பொது அதிகாரம் (பவர்) பெற்று, அதன் அடிப்படையில் தான் குடியிருப்பு கட்டுகின்றன. அந்த குடியிருப்புகளை, பொது அதிகார முகவராக கட்டுமான நிறுவனங்களே வீடுகளை விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், கூட்டு மதிப்பு முறை அமலுக்கு வந்த பின்னர், நில உரிமையாளர் பெயரில் இருந்து நேரடியாக வீடு விற்பனை நடப்பது போன்று, ஆவணத்தில் எழுத, சார் பதிவாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இதனால் பொது அதிகார முகவர் விற்பனை செய்தாலும், அந்த விற்பனையின் வருமானம், நில உரிமையாளர் கணக்கில் முதலீட்டு லாபமாக சேர்க்கப்படும்..
இதற்காக நில உரிமையாளர் அவர் வருமான வரி செலுத்தும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இனி நில உரிமையாளர்கள், வீடுகளை விற்கும் போது பொது அதிகாரம் அளிக்க மாட்டார்கள். இதனால், கட்டுமான நிறுவனங்கள் கிரையம் பெற்று தான், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கட்டுமான நிறுவனத்தினர் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications