வரும் நாட்களிலும் தொடரும் கனமழை? அதிநவீன கருவிகளுடன் சென்னைக்கு விரைந்த.. தேசிய பேரிடர் மீட்பு படை
சென்னை: கனமழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த மூன்று குழுவினர் சென்னை விரைந்துள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வந்தது.
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கொட்டிதீர்க்கும கனமழையால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கனமழை
சென்னை நகரில் கிண்டி, தாம்பரம், வேளச்சேரி, எழும்பூர், வடபழனி என பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழை இரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை கொட்டித்தீர்த்தது. மிகக் குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகள்
இதனால் தலைநகரில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சில முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சில இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்றது.
Recommended Video

தேசிய பேரிடர் மீட்பு படை
விடாமல் பெய்யும் மழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ள மீட்புப் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த மூன்று குழுவினர் சென்னை விரைந்துள்ளனர். அதிநவீன கருவிகளுடன் சென்னை விரைந்துள்ள மீட்புப் படையினர் மணலி, தாம்பரம், பெரும்புலிபாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

3 குழுக்கள்
தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் புறப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேவை ஏற்படும்பட்சத்தில் இந்த குழுக்களும் சென்னைக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையும் சென்னை வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது,

உதவி எண்கள்
சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications