வெளுத்து வாங்கும் கனமழை! 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! எந்தெந்த ஊர் என தெரியுமா?
சென்னை : கனமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது,

மழைக்கு வாய்ப்பு
அதே நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை
இந்நிலையில் சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம், கேகே நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையார் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

புறநகர் பகுதிகள்
இதே போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் காட்டாங்குளத்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், தாம்பரம், ஆழ்வார் திருநககர்,வானகரம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளித்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் முதலமைச்சர் வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். கனமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications