சென்னைவாசிகளே!! இந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம்.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக நகரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், சென்னை நகரப் போக்குவரத்தில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்களைச் சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சனிக்கிழமை தொடங்கி சென்னை உட்பட வடதமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்தச் சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டித்தீர்க்கும் கனமழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை, ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே கடலூரில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடப்பதால் சென்னை முதல் டெல்டா பகுதிகள் வரை அதிதீவிர கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கடந்த 2 நாட்களாகக் கனமழை நல்ல மழை பெய்துள்ளது, இதனால் நகரில் பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீரை மோட்டரை கொண்டு வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீரை வெளியேற்றும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல சாலைகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சரியானாலும் கூட சில பகுதிகளில் இதேநிலையே தொடர்கிறது.

சென்னை போலீசார்
இந்நிலையில், கனமழையால் சென்னை நகரப் போக்குவரத்தில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்களைச் சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை நகரப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாதவரம்
அதன்படி மழைநீர் பெருக்கு காரணமாக மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச் சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேபிள் வில்லேஜ் ரோடு வழியாகப் புழல் கால்வாயை அடைவதால் எம்.ஆர்.எச் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரே பக்கத்தின் வழியாகச் செல்கின்றது.

காமராஜர் இல்லம்
திருமலைப்பிள்ளை ரோடு. காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால் - பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

மாநகர பேருந்து சேவையில் மாற்றம்
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாநகரப் பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் பிரிக்கிளின் ரோடு. ஸ்டரகன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டரகன்ஸ் ரோடு. பிரிக்கிளின் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மரங்கள் விழுந்து எந்த போக்குவரத்து சேவையும் பாதிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications