பெட்ரோல் உடன் போட்டிப்போடும் காய்கறிகள்.. சென்னையில் ரூ 100ஐ தாண்டிய தக்காளி விலை.. பொதுமக்கள் அவதி
சென்னை: தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தலைநகர் சென்னையில் காய்கறி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை ரூ 100 கடந்துள்ளது.
சென்னை உட்பட வடமாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலை மிகக் குறுகிய நேரத்தில் அதிக மழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கனமழை
வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதால் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகரின் பல முக்கிய பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஒருபுறம் மோட்டரை கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், மறுபுறம் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீரை வெளியேற்றும் பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சதமடித்த தக்காளி
தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், காய்கறி விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ 100ஐ கடந்து விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ 70 விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ 100 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ 40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது விலை இரட்டிப்பாகியுள்ளது.

காய்கறி விலை உயர்வு
தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெங்காயம், கேரட், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விலை வெறும் சில நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கேரட் 120 ரூபாய்க்கும், முருங்கை ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், அவரை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன காரணம்
காய்கறிகளின் விலை ஏற்றத்திற்கு வருகை குறைந்ததே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாகச் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 70 லோட் தக்காளி வரும். ஆனால் கனமழையால் இப்போது 35 லோட் தக்காளி மட்டுமே வருகிறது. இதன் காரணமாகவே தக்காளி விலை இரட்டிப்பாக்கியுள்ளது. இதனிடையே, தொடர் மழை காரணமாகக் காய்கறிகள் வரத்து மேலும் குறையலாம் என்பதால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எப்போது சரியாகும்
சென்னை மட்டுமின்றி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளிச் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை ஒரு வாரக் காலத்திற்கு நீட்டிக்கும் என்பதால் வரும் காலங்கள் காய்கறி விலை மேலும் உயரலாம். மழை நின்ற பிறகு 10, 15 நாட்களில் காய்கறி விலை மீண்டும் கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதவி எண்கள்
வரும் நாட்களிலும் கனமழை பெய்யும் என்பதால் சென்னைவாசிகள் முக்கியமான சான்றிதழ்களை, ஆவணங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பரண் போன்ற உயரமான இடங்களில் தனியாக வைப்பது மூலம் அவை தண்ணீர் நனைவதில் இருந்து பாதுகாக்கலாம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications