அதிர்ந்த சென்னை.. காலையில் ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. கலங்கிப்போன பெண்கள்
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை 6 மணி முதல் காலை 7 மணிக்குள் ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 2 பேர் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து தங்கசங்கிலியை பறித்து சென்றது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பட்டப்பகலில் ரவுடிகள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொது வெளியில் கார்களை இடைமறித்து ரவடிகளை வெட்டி கொல்லும் வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் முதல் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரை பலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருவது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்த கவலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு போலீசின் கட்டுப்பாட்டில் இல்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவம் என்பது இன்று காலை 6 மணி முதல் காலை 7 மணிக்குள் நடந்துள்ளது.
* அதன்படி இன்று காலையில் திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் ஒரு பெண் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* அதேபோல் பெசன்ட் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஷாப்பிங் நகர் பகுதியில் அம்புஜம் என்ற 60 வயது மூதாட்டி நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது தங்கசங்கிலியை பறித்தனர். உடனே சுதாரித்து கொண்ட அம்புஜம் தனது செயினை பிடித்தார். இதனால் செயின் அறுந்தது. அரை சவரன் தங்க செயின் மட்டும் கொள்ளையர்கள் கையில் சிக்கியது. பெசன்ட் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கிண்டி எம்ஆர்சி நகர் மைதானம் அருகே நிர்மலா என்பவர் இன்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரிடம் இருந்து 5 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டது. இதுபற்றி கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை அருகே இன்று காலையில் இந்திரா என்ற பெண் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்து ஒரு சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் 2 இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. வித்யா என்பவரிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க நகை பறிக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு பெண்ணிடமும் தங்க செயின் பறிப்பு நடந்துள்ளது. இந்த 6 சம்பவத்திலும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரமாக்கி உள்ளனர்.
மேலும் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஒரு மணிநேரத்தில் மொத்தம் 6 பெண்களிடம் தங்க செயின் பறிப்பு நடந்து இருப்பது சென்னையை அதிர வைத்துள்ளது. அதோடு இந்த சம்பவங்கள் சென்னையில் வசிக்கும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications