பெங்களூர் பந்த்: போராட்டத்தை அவங்க சமாளிக்கட்டும்! குறுவை சாகுபடியை நாம் சமாளிக்கலாம்! துரைமுருகன்
சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக கன்னட அமைப்புகள் சார்பில் இன்று பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூர் செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தமிழக பேருந்துகளும் நேற்று இரவு முதல் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் பந்த் போராட்டம் தொடங்கவுள்ள நிலையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றும் வழிமுறை இருப்போருக்கு Work from home ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஓசூர் சாலை இன்று வெறிச்சோடி கிடக்கிறது. இந்த நிலையில் பந்தை அமைதியான முறையில் நடத்துமாறு முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த பந்த் குறித்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அறிவாலயத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை அந்த மாநில அரசாங்கம்தான் சமாளிக்க வேண்டும். இந்த ஆண்டு குறுவை சாகுபடியை நாம் சமாளிக்கலாம் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications