ப்ளீஸ் வேண்டாம்னு சொன்னா கேளுங்க! மதிமுகவினருக்கு துரை வைகோ பிறப்பித்த அன்புக்கட்டளை!
சென்னை: ஆளுயர மாலைகளையும், பளபளக்கும் சால்வைகளையும் தனக்கு அணிவிப்பதை மதிமுகவினர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
மரக்கன்றுகளையும், போட்டித் தேர்வுகளுக்கு உரிய புத்தகங்களையும் வழங்கினால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மதிமுகவினருக்கு அவர் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ள விவரம் வருமாறு;

மலர் மாலை
நமது கழகத்தின் இரத்த நாளங்களான தோழர்களால் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்ட என்னை, மலர்மாலை அணிவித்தும், சால்வைகள் அணிவித்தும் கழகக் குடும்பத்தினர்கள் அன்புகாட்டி வரவேற்கிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே நான் ஒரு வேண்டுகோளை தெரிவித்திருந்தேன். அதனை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

புத்தகங்கள்
ஆளுயர மாலைகள், பளபளக்கும் சால்வைகள் ஆகியவைகளை எனக்கு அணிவித்து வரவேற்பு அளிப்பதை முற்றாக தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக கழக வண்ணம் பதிக்கப்பட்ட கைத்தறி துண்டுகள், கழகக்கரை வேட்டிகள், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவைகளை அளித்து என்னை வரவேற்குமாறு அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன்.

உண்மையானவர்கள்
சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக மரக்கன்றுகளை நீங்கள் கொடுத்து வரவேற்றால், அதனை அங்குள்ள தோழர்களுக்கே நான் கொடுத்து, அதனை அங்கு நட்டு மரமாக்கும் நல்ல முயற்சியில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படலாம். என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை கழகத் தோழர்கள் கண்டிப்புடன் பின்பற்றி -உண்மையான மறுமலர்ச்சி இயக்கத்தவர்கள் நாம் என்பதை உலகுக்கு உணர்த்திட முன்வருமாறு, கழகக் குடும்பத்தினரிடம் உரிமையுடனும், உறவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

சுற்றுப்பயணம்
தமிழகம் தழுவிய அளவில் வைகோவுக்கு பதிலாக இப்போது துரை வைகோ தான் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வாறு அவர் செல்லுகிற இடங்களில் எல்லாம் மாலைகளும், சால்வைகளும் குவிவதை கண்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தலைமை நிலையச் செயலாளராக பதவியேற்றவுடனே துரை வைகோ இது தொடர்பாக கேட்டுக்கொண்டும், அன்பின் மிகுதியால் அவரது வேண்டுகோளை கட்சியினர் யாரும் ஏற்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications