துரை வைகோவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தந்த உறுதி! திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ சந்தித்துப் பேசி சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.
துரை வைகோவை வாஞ்சையுடன் வரவேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, அவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக உறுதி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனிடையே இந்தச் சந்திப்பு குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அமைச்சருடன் சந்திப்பு
விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னைச் சந்தித்து அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நான் மின் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். தேவைப்பட்டால் முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பேன் என்று கூறியனேன். அதன் அடிப்படையில், கேங்மேன் பணியாளர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

கேங்மேன்
அமைச்சர் அவர்களும், இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கமிட்டி விரைவில் தன்னுடைய அறிக்கையை கொடுத்தவுடன், இது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் குறித்து கமிட்டி அமைக்கப்பட்டுள்ள தற்கும் நன்றி தெரிவித்தேன். அது போலவே மின் வாரியத்தில் பணி புரிகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்தும் பேசினேன்.

நிதி நிலைமை
வாரியத்தின் நிதி நிலைமை சீரான உடன் கண்டிப்பாக இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்கின்ற உத்தரவாதத்தையும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார்கள். இந்தச் சந்திப்பில் மின்துறை அமைச்சர் அவர்களின் பணிகளை, அதுவும் குறிப்பாக மின் தடங்கல் ஏற்பட்டால் அதை சரி செய்யக்கூடிய மின்னகம் சார்ந்த பணிகள், அதில் வருகின்ற அனைத்து புகார்களும் 99% நிறைவேற்றப்பட்டு இருப்பதற்காக பாராட்டுகளைத் தெரிவித்தேன்.

மின் துறைக்கு பாராட்டு
மின்துறை குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கும் என்கின்ற நோக்கத்தோடு வருகின்ற 16.04.2022 அன்று ஒரு லட்சமாவது மின் இணைப்பினை முதல்வர் துவக்கி வைக்க இருப்பதற்கு மதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தேன். அமைச்சர் அவர்களும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அதுபோலவே மதிமுக, திமுக ஆட்சிக்கு, மக்களிடம் ஒரு பாலமாக இருக்கும் என்கின்ற செய்தியையும் தெரிவித்து, அவருடைய பணிகளை ஒட்டுமொத்தமாக பாராட்டி அவரிடமிருந்து விடை பெற்றேன்.












Click it and Unblock the Notifications