பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே எனக்கில்லை! தொண்டர்களுக்கு தொந்தரவு தராத துரை வைகோ!
சென்னை: தனக்கு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே கிடையாது என்று கூறியுள்ள துரை வைகோ, தனது பிறந்தநாளான இன்று யாரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொள்ளவில்லை.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ எவ்வித சிரமத்தையும் கொடுக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதனிடையே பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை என்பதை அவரே கூறியிருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

துரை வைகோ
பொதுவாக எனக்கு பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இல்லை. இதுபோன்ற கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இயக்கத் தலைவர் வைகோ தன்னுடைய பிறந்தநாளை ஒருபோதும் கொண்டாடியது இல்லை. நீண்ட காலமாக தன் பிறந்தநாள் தேதியையே ரகசியமாக வைத்திருந்தவர் அவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவருடைய பிறந்தநாள் தேதியே கழகத் தோழர்களுக்கு தெரிய வந்தது.

ஆதாயமில்லா மக்கள் பணி
நம் தலைவர் அவர்கள் தன் பிறந்தநாளை கொண்டாட ஒருபோதும் விரும்புவது இல்லை. அதே மனநிலை தான் எனக்கும். பிறந்தநாள் கொண்டாட்டங்களின் மீது பெரிய ஈடுபாடு எதுவும் இல்லை.'ஆதாயமில்லா மக்கள் பணி..!சமரசம் இல்லா மக்கள் நலன்..!' என்ற கொள்கை உறுதியோடு மக்களுக்கு பணியாற்றவே இந்த அரசியலில் நான் பயணிக்கிறேன்.

வீண் விளம்பரங்கள்
நம் கழகத் தோழர்கள் அன்பின் மிகுதியால் எதாவது செய்ய விரும்பினால் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் போன்ற இடங்களில் அவர்களுக்கு ஒரு வேளை உணவளித்தால் கூட போதுமானது. பிளக்ஸ், போஸ்டர் போன்ற ஆடம்பரங்களை, வீண் விளம்பரங்களை தவிர்க்க வேண்டுகிறேன். எந்த செயலும் அர்த்தமற்றதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்க கூடாது என நினைக்கிறேன்.

வாழ்த்து சொல்வது இல்லை
நான் பெரும்பாலும் கழகத் தோழர்களின் பிறந்தநாளில் கூட அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்வது இல்லை. ஒருவருக்கு வாழ்த்து சொல்லி ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்க இயலாமல் போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் இதுபோன்ற நடைமுறைகளை நான் முற்றாக தவிர்த்து விடுகிறேன். எனக்கும் மற்றவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என நான் விரும்புவது இல்லை.












Click it and Unblock the Notifications