பாவம் ஓ.பன்னீர்செல்வம்! அவர் ரொம்ப குழப்பத்தில் இருக்கார் போல்! அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பாவம் என்றும் அவர் அரசியல் பிரச்சனையால் ரொம்ப குழம்பிப் போய் இருக்கிறார் எனவும் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வரோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதனை துரைமுருகன் கலாய்த்துள்ளார். இது குறித்து துரைமுருகன் விடுத்துள்ள பதிவு விவரம்;

''1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
இதில் வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னால் முதல்வராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின கர்நாடக மாநில முதல்வரோடும், நீர்வளத்துறை அமைச்சரோடும் பேசி காவிரி தண்ணீரை பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான்.
இனி பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்சநீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாததனம் தான்.
பாவம், அரசியல் பிரச்சனையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத் தான் அவர் அறிக்கை காட்டுகிறது.''












Click it and Unblock the Notifications