''கலைஞர்'' காரில் பயணிக்கும் போது தூங்கமாட்டார்! கட்சிக்காரனை விட்டுக்கொடுக்க மாட்டார்! -துரைமுருகன்
சென்னை: கருணாநிதியை பொறுத்தவரை காரில் பயணிக்கும் போது தூங்கவே மாட்டார் என்றும் கட்சிக்காரனை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காதவர் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், கருணாநிதியுடன் தானும், ஆற்காடு வீராசாமியும் காரில் பயணிக்கும் போது தாங்கள் இருவரும் தூங்கிவிடுவோம் என்றும் ஆனால் கருணாநிதி தூங்காமல் சிந்தித்துக் கொண்டே பயணம் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் காரில் சென்றுகொண்டிருக்கும் போதே எந்தெந்த கம்பத்தில் கட்சிக்கொடி பறந்தது, கட்சிக்கொடி பறக்கவில்லை என்பதையும் அவர் கவனித்துக் கொள்வார் என்றும் இப்படித்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு நிகழ்வு நடந்தது என்ற பிளாஷ்பேக் கதையையும் கூறினார்.
ஒரு முறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி கருணாநிதியுடன் தானும் கார் ஏறிய போது, எங்கய்யா கயிறு, கொடியெல்லாம் எடுத்து வைத்துவிட்டீரா என கேட்டதாகவும் கயிறு, கொடியெல்லாம் எதற்கு என தாம் குழம்பிய நிலையில் காஞ்சிபுரத்தில் கட்சிக்காரர்கள் வரவேற்பை ஏற்பதற்காக காரை நிறுத்தச் சொன்ன கருணாநிதி, முதல் வேளையாக பொலிவிழந்து கிழியும் நிலையில் இருந்த கட்சிக்கொடிக்கு பதில் தாம் கையோடு எடுத்துச் சென்ற கட்சிக்கொடியை ஏற்றி வைத்தது எல்லோரையும் திகைக்க வைத்தாகக் கூறினார்.
மற்ற ஊரில் கொடி எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம், அண்ணா பிறந்த ஊரில் கட்சிக் கொடி இப்படி இருக்கலாமா எனக் கேட்டதோடு வெட்கமாக இல்லைய என ஆன் தி ஸ்பாட்டிலேயே நிர்வாகியை வறுத்தெடுத்தார் கருணாநிதி என துரைமுருகன் கூறினார். தாம் எந்தளவு நிர்வாகிகளை போட்டுத் தாக்குகிறோரா அதேயளவு அவர்கள் திருப்பி ஏதாவது கூறினால் அதை தாங்கிக் கொள்வார், ரசிப்பார் எனத் தெரிவித்தார். அதேபோல் கட்சிக்காரனுக்கு ஒன்று என்றால் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார் எனவும் துரைமுருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications