அதிமுக இதுக்காக வெளியே ஓடிட்டாங்க.. இல்ல அதுக்காகன்றதுதான் உண்மை.. துரைமுருகனும் ஸ்டாலினும் கிண்டல்
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கிற தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சியினர் வெளியிலே ஓடி விட்டார்கள் என அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விமர்சனம் செய்தார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யும் திருத்த மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமியர்களின் சமூகத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டெல்லியில் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தியா
இந்த நிலையில் கொரோனா இந்தியாவுக்குள் பரவியதால் இந்த மசோதாவை அமலுக்கு கொண்டு வரவில்லை. இதை விரைவில் அமல்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கான தனி தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம்
முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்வதற்கு முன்பே எதிர்க்கட்சியான அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து பேரவை வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையிஸ் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் பேச கே பி முனுசாமி முயற்சித்தார். அவர் தொடர்ந்து வலியுறுத்தியும் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில் அதிமுகவினர் ஏன் வெளிநடப்பு செய்தார்கள் என சபாநாயகர் அப்பாவு, அவை முன்னவர் துரைமுருகனை பேச அழைத்தார். அதற்கு துரைமுருகன், அவர்கள் ஏன் வெளிநடப்பு செய்தார்கள் தெரியுமா, குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கிற தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சியினர் வெளியிலே ஓடி விட்டார்கள் என்றார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

அவை முன்னவர்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை பேசுமாறு சபாநாயகர் அழைத்தார். அதற்கு அவர், அவை முன்னவர் தீர்மானத்தை எதிர்க்கிற தைரியம் இல்லை என எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டினார். ஆனால் ஆதரிக்கிற தைரியம் இல்லை என்பதுதான் உண்மை என கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் சிரித்தனர். அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. இந்த திருத்த சட்டத்திற்கு அதிமுகவின் எம்பி ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்திருந்தார். எனவே இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் அதிமுகவினர் வெளியேறிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications