நான் உட்பட யாராக இருந்தாலும் சரி.. நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் அவ்வளவுதான் -துரைமுருகன்
சென்னை: நான் உட்பட யாராக இருந்தாலும் சரி நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் தண்ணீருக்கு கோபம் வந்துவிடும் என மூத்த அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் தண்ணீரை ஆய்வு செய்யச்சென்றவர் அங்கே செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், சென்னைக்கு புறநகரில் ராமஞ்சேரி என்ற இடத்தில் புதிய ஏரியை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நேற்றிரவு கூட முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது குறித்து தாம் பேசியதாகவும் கூறினார். தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புவியியல் அமைப்பு இல்லாமல் நினைத்த இடத்தில் புதிய ஏரியை உருவாக்க முடியாது என்றார்.

இந்த ஆண்டு சென்னையில் பெய்த மழையை போல் வேறு எந்த ஆண்டுமே தாம் பார்த்ததில்லை என்றும் வரலாறு காணாத புயலில் தாக்கம் இது என்றும் அவர் தெரிவித்தார். நீர் நிலைகளை ஆக்கிரமித்தோ, அல்லது நீர் வழிப்பாதைகளுக்கு குறுக்கீடு ஏற்படும் வகையிலோ வீடுகள் கட்டினால் தண்ணீருக்கு கோபம் வந்து அது வீட்டுக்குள் வருவதாக தெரிவித்தார். இதனால் எந்தக் காரணத்தை கொண்டும் நீர்வழிப்பாதையை குறுக்கிடும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்றார்.
வெள்ள நிவாரணப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் சீரமைப்பு பணிகள் முடிந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை அளித்தார்.
அடையாற்றில் முறையாக தூர்வாரி சீரமைத்து வைத்ததால் கடந்த ஆண்டுகளை போல் அதிலிருந்து தண்ணீர் சாலைகளுக்கு வரவில்லை என்றும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்யச் சென்ற போது தனது பேரன், பேத்தியையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். இது தான் ஏன் என அங்கிருந்த அதிகாரிகளுக்கே புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications