துர்கா ஸ்டாலின் எனும் நான்.. அந்தக் கண்ணீரின் வலி.. காலம் தடவிய மருந்து!
சென்னை: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி நிறுத்தி தனது முகத்தை உயர்த்திப் பார்த்தபோது, குபுக்கென்று உடைந்து போய் அழுது விட்டார் அவரது மனைவி துர்கா.
Recommended Video
அந்த அழுகையின் வலியை யாராலும் உணர முடியாது. எத்தனை கால கஷ்டங்கள், போராட்டங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், விரோதங்கள் .. அதில் தொக்கிக் கிடக்கின்றன என்பது துர்காவுக்கு மட்டுமே புரிந்த உண்மை.
இவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர். மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்
அரசியல் குடும்பத்தில் வாக்கப்பட்ட துர்காவுக்கு போராட்டங்கள் புதிதல்ல. மறைந்த கலைஞர் கருணாநிதியாகட்டும், கணவர் மு.க.ஸ்டாலினாகட்டும்.. ஒவ்வொருவரும் அடித்த எதிர்நீச்சல் வரை அத்தனை போராட்டங்களையும் பார்த்தே வளர்ந்தவர் துர்கா .
அரசியல் சுயம்பு
மறைந்த கலைஞர் கருணாநிதியின் காலத்திலேயே சுயம்புவாக உருவெடுத்தவர் ஸ்டாலின். கருணாநிதி மகன் என்று சர்வ சாதாரணாக முத்திரை குத்தி அவரை இளக்காரம் செய்ய ஒரு கூட்டமே காத்திருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் புன்னகையால் அதை புறம் தள்ளி விட்டு ஒவ்வொரு போர்க்களமாக புகுந்து புறப்பட்டார் ஸ்டாலின்.
கேலி கிண்டல்கள் எத்தனை
ஸ்டாலின் சந்தித்த ஒவ்வொரு அவமானம், விரோதம், கேலி கிண்டல்களுக்கெல்லாம் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தவர் துர்கா மட்டுமே. கணவருக்கு ஆறுதலாக மட்டும் இல்லாமல், அவருக்கு உறுதுணையாக இருந்து அவரது ஒவ்வொரு அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடித்தளத்தையும் இலகுவாக்கி கொடுத்தவர் அவர்தான். அவரது இறை நம்பிக்கைக்கு ஸ்டாலினும் சரி, கருணாநிதியும் சரி யாருமே இடையூறு செய்ததில்லை. அவரவர் பாதையில் பயணித்தனர்.. அதுதானே பெரியார் கற்றுக் கொடுத்த பாடம்.
ஆருயிர்த் தோழி
கணவருக்காக ஒரு மனைவியாக, ஒரு தோழியாக என பல அவதாரம் எடுத்து அனைத்து வகையிலும் ஸ்டாலின் துவண்டு போய் விடாமல் பார்த்துக் கொண்டதில் மிக மிக முக்கியமானவர் துர்காதான். மனைவியரை மதியூகி என்பார்கள், நல் ஆலோசனை கூறும் மந்திரி என்பார்கள். துர்காவும் அப்படித்தான். தனக்குத் தோன்றுவதை கணவரிடம் ஒளிவுமறைவில்லாமல் சொல்லி அவருக்கு ஊக்கம் கொடுக்கவும் அவர் தவறியதில்லை.
நிறைவேறிய லட்சியம்
ஸ்டாலினின் கனவு என்பதை விட கருணாநிதி குடும்பத்தாரின் கனவு என்பதை விட துர்காவின் மிகப் பெரிய கனவு என்பது ஸ்டாலின் அரசியலிலும், ஆட்சியிலும் உச்சம் பெற வேண்டும் என்பது. இன்று இரண்டையும் தொட்டு விட்டார் ஸ்டாலின். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று அவர் சொன்ன அந்த தருணத்தில் துர்காவிடமிருந்து அழுகை வெடித்து வந்தது, அவரது மனதில் இத்தனை காலமாக அடக்கி வைத்திருந்த அத்தனை ஆயாசமும் ஒரு சேர வெளிக்கிளம்பி வந்து கொட்டி விட்டது.
அற்புத தருணம்
இத்தனை நாள் ஸ்டாலின் பட்ட கஷ்டத்திற்குக் கிடைத்த பலனை எண்ணி உலகிலேயே அனைவரையும் விட அதி மகிழ்ச்சி அடைந்தவர் துர்காவாக மட்டுமே இருக்க முடியும். அதன் வெளிப்பாடுதான் அந்த ஆனந்தக் கண்ணீர். "இவரால் முதல்வராக முடியாது" என்று சபித்தோர், வாய் விட்டு வெறுப்பை உமிழ்ந்தோர் அத்தனை பேரின் தலையையும் வெட்கித் தலை குனிய வைத்து விட்டார் துர்கா என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஸ்டாலினின் காத்திருப்பை விட, கஷ்டத்தை விட துர்காவின் தியாகமும், அர்ப்பணிப்பும் மிகப் பெரியது.