அரசு அலுவலகங்களில் அடேங்கப்பா தீபாவளி மாமூல் வசூல்.. ஷாக் ஆன லஞ்சஒழிப்பு துறை!
சென்னை : தீபாவளி மாமூல் வசூலித்ததாக எழுந்த புகாரின்பேரில், சென்னை, செங்கல்பட்டு, நெல்லை ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ. 7 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, அரசு அதிகாரிகள் மாமூல் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், சென்னை, செங்கல்பட்டு, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடி லஞ்ச ஒழிப்பு துறை 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகறிது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கொதிகலன்கள் இயக்குநர் அலுவலகத்தில், நேற்று நடந்த லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டில், மொத்தம் ரூ. 3.5 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை சோதனை நடத்தினர். 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் ரூ. 15,000 கணக்கில்வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
இந்த நிலையில், செங்கல்பட்டு சார்-பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இன்றும் தொடர்ந்த சோதனையில் விழுப்புரம் இணைபதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் சில ஆயிரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
அதிரடி சோதனை
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி அளவில் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளி வாயில் கதவை அடைத்தும் வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழைய முடியாமலும் உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாமலும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத சில ஆயிரங்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணக்கில் வராத பணம்
இதேபோல் கோவை சூலூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்து அலுவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை விசாரணை முடிவடையாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு வெளியிடப்படவில்லை.
வாசலுக்கு பூட்டு
நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினம் தோறும் புதிய வாகன பதிவு பெற, ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க என வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை அலுவலகத்தில் வந்திருந்தவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரை உள்ளே நிறுத்தி வாசலை பூட்டி லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.