எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு.. டெண்டர் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரூபாய் 26.61 கோடி முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

மழைநீர் வடிகால், சாலைப் பணிகளுக்கான டெண்டர்களை முறைகேடாக முடிவு செய்ததன் மூலம், அன்றைய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

மழைநீர் வடிகால் அமைக்க 290 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக 246 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் 26.61 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்தனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி சேர்ந்த 10 பொறியாளர்கள் மீது ரூ. 26.61 கோடி முறைகேடு செய்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications