தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மாவட்டங்களிடையே பயணிக்க இ பாஸ் கட்டாயம்.. பஸ், ரயில் சேவை கிடையாது
சென்னை: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
ஜூலை 31-ஆம் தேதியுடன், அன்லாக் 2.0 முடிவுக்கு வருகிறது. எனவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எந்த மாதிரியான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இ பாஸ்
இந்த ஆலோசனையின் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதிகப்படியான தளர்வு கொடுக்க வேண்டாம் என்று மருத்துவ குழு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கூட்டத்திற்கு பிறகு முதல்வரின் அறிவிப்பு அறிக்கையாக வெளியானது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ பாஸ் பெறும் நடைமுறை தொடரும். அதேபோன்று ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்கும் போதும் வாகனங்களுக்கு இ பாஸ் பெறுவது கட்டாயம் ஆகும். இந்த உத்தரவு ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும் என்று அறிவித்துள்ளார்.

பஸ், ரயில்கள்
மேலும், தமிழகம் முழுக்க பொதுப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதாவது, ரயில்கள், பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுக்க பொதுப் போக்குவரத்துக்கான தடை தொடரும்.

கடைகள்
தற்போது 50% ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனங்கள் 75% ஊழியர்களுடன் இயங்கலாம். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 7 மணி வரை இயங்கிக் கொள்ளலாம் இவ்வாறு முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள்
உணவகங்கள் தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மட்டுமின்றி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வருவாய் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், அத்தியாவசிய மற்றும் அனைத்து பொருட்களையும் இ காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications