குலுங்கிய கட்டிடம்..அண்ணா சாலையில் நில அதிர்வு..சென்னைவாசிகள் அதிர்ச்சி..மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
சென்னை அண்ணாசாலையில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை: அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் அதிர்வு உணரப்பட்டதால் அங்கிருந்த ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்துடன் வெளியேறி சாலைக்கு வந்தனர். சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் நில அதிர்வு ஏற்படவில்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் லாயிட்ஸ் ரோடு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எத்தனை புள்ளிகள் பதிவானது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம் குலுங்கியதா என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் சென்னையில் நில அதிர்வு ஏற்பட மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல என ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் போர் போடும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதை நிலநடுக்கம் என நினைத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நில அதிர்வு குறித்து அந்த கட்டிடத்தில் பணிபுரியும் சிலர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர். காலையில் 10.30 மணிக்கு டீ குடிக்கலாம் என எழுந்த போது கட்டிடம் லேசாக அதிர்ந்தது. அப்போது பயந்து போய் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்தோம். சில நிமிடங்கள் அதிர்வு உணரப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அவ்வப்போது நில அதிர்வு ஏற்படுவது வழக்கம். கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் லேசான நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். இதை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையமும் உறுதிபடுத்தியது. இன்றைய தினம் ஏற்பட்டது நில அதிர்வுதானா என்பது பற்றி இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை












Click it and Unblock the Notifications