வானத்தில் நடக்கும் "கிரிக்கெட்".. தமிழ்நாடு வானிலையில் நடக்கும் மெகா மாற்றம்.. வல்லுநர்கள் வார்னிங்
சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை (chennairains.com) மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் 14 நாட்கள் மிக கனமழை பெய்தது. தமிழ்நாடு முழுக்க பரவலாக கனமழை பெய்து வந்தது. முதல் 14 நாட்கள் பெய்த மழைக்கு பின் இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் மழைக்கு காரணம் - வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. இரண்டாவது மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதி.
ஆனால் அதன்பின் பெரிதாக கனமழை பெய்யவில்லை. மூன்றாவதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரிதாக வலிமை அடையாமல், மழையை கொடுக்காமல் சென்றது.
மேகம் கருக்கும்.. மின்னல் சிரிக்கும்.. சாரல் அடிக்கும்! கீழே “ஹெவி”.. மேலே “லைட்” - வானிலை அப்டேட்
மழை
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை (chennairains.com) மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் அணியின் விக்கெட்டுகளை எந்த பவுலரும் எடுக்க முடியாத நேரத்தில் சில அணிகள் பார்ட் டைம் பவுலர்களை களமிறக்கும். இந்த பார்ட் டைம் பவுலர்கள் திடீரென வந்து விக்கெட்டுகளை எடுப்பார்கள். இந்திய அணியில் இப்படித்தான் சச்சின் டெண்டுல்கர் இருந்தார். இவர் அணியில் ஒரு உண்மையான விக்கெட் டேக்கிங் பார்ட் டைம் பவுலராக இருந்தார். தற்போது தமிழ்நாட்டில் வீசும் கிழக்கு காற்றை சச்சினுடன் ஒப்பிடலாம். அல்லது "பாடகர்" கமல் ஹாசனுடன் ஒப்பிடலாம்.
வானிலை
வானிலை ஆய்வாளர்கள் பொதுவாக புயல் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றியே ஆய்வு செய்வார்கள். இதனால் சிறு சிறு வானிலை மாற்றங்கள், அழுத்த மாற்றங்கள் பற்றி அவர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். முக்கியமாக கிழக்கு காற்று போன்ற லேசான மாற்றங்களை இவர்கள் கவனிக்க மாட்டார்கள். இதற்கு முன்பே தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சமயங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி பரவலான மழையையும், கிழக்கு காற்று கனமழையையும் கொடுத்து இருப்பதை பார்த்து இருக்கிறோம். முக்கியமாக கடலோர மாவட்டங்கள், தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் இப்படி கிழக்கு காற்று காரணமாக மழை பெய்ததை பார்த்து இருக்கிறோம்.
சென்னை ரெயின்ஸ்
அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் இந்த கிழக்கு காற்றின் பாதிப்பிற்கு கீழ் வர போகிறது. இங்கே எல்லாம் பரவலாக வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து மழை பெய்ய உள்ளது. சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் அந்த அளவிற்கு கனமழை பெய்யாது. டெல்டா, தென் தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது சென்னையில் மழை குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கிழக்கு காற்றானது இந்தியா மற்றும் இலங்கையின் கீழ் அட்சரேகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு காற்று
கிழக்கு காற்று வலிமை அடைந்து வருவதால், மலையோர மாவட்டங்களில் காணப்பட்ட கீழ் நிலை காற்று குவிதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் மலையோர மாவட்டங்களில் மழை குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டெல்டா, தெற்கு மாவட்டங்களில் மழை தீவிரம் அடையும். நாளை மாலையில் இருந்து அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து இங்கே மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வார இறுதியில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திற்கு ஓரளவு பரவலாக மழை பெய்யும், இது ஓரளவுக்கு இந்த பகுதிகளில் மழை பற்றாக்குறையை குறைக்கும் .
வலிமை அடைந்தது
இப்போது அந்த பார்ட் டைம் பவுலர் விவகாரம் பற்றி பேசலாம். இந்த கிழக்கு காற்று என்பது நமக்கு வெறும் டெல்டா மற்றும் தென் மாவட்ட மழையை கொடுக்கவில்லை. இது இன்னொரு முக்கியமான ரோலையும் செய்கிறது. வங்கக்கடலில் டிசம்பர் 2ம் வாரம் உருவாக போகும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், கடந்த வாரம் உருவாகி பெரிதாக மழையை கொடுக்காத 94B காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கும் இடையில் வேறுபாடாக இந்த கிழக்கு காற்றுதான் இருக்க போகிறது. கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது. இது கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெரிதாக மழையை கொடுக்காமல் மறைந்து உள்ளது. வறண்ட காற்று காரணமாக இது வலிமை அடைவதில் சிக்கல் இருந்தது. வறண்ட காற்று இந்த தாழ்வு பகுதியை வலிமை அடைய விடாமல் தடுத்தது. பெரும் போராட்டத்திற்கு பின்புதான் இது தாழ்வு மண்டலமாகவே மாறியது.
கிழக்கு காற்று பார்ட் டைம் பவுலர்
ஆனால் தற்போது உருவாக போகும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு ஆதரவாக இந்த கிழக்கு காற்று இருக்கும். இந்த கிழக்கு காற்று காரணமாக ஈரப்பதமான சூழ்நிலை வானத்தில் நிலவும். இதனால் வறண்ட காற்று கடந்த முறை போல வராது. இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கிழக்கு காற்று மறைமுகமாக உதவும். அதாவது அடித்து ஆடும் வறண்ட காற்றை விக்கெட் எடுக்க போகும் பார்ட் டைம் பவுலர் போல இந்த கிழக்கு காற்று செயல்படும். வறண்ட காற்றை விக்கெட் எடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உதவ போவதே இந்த கிழக்கு காற்றுதான். இந்த கிழக்கு காற்று பெரிய மழையை கொடுக்காமல் போனாலும் கூட மறைமுகமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இது காரணமாக இருக்க போகிறது. இந்த தாழ்வு பகுதி எவ்வளவு வலிமையாக இருக்கும், எங்கே செல்லும் என்பது வரும் நாட்களில் தெரியும், என்று சென்னை ரெயின்ஸ் குறிப்பிட்டு உள்ளது.