கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துல இறங்காதீங்க.. சிரமமின்றி சென்னை மின்சார ரயிலில் போக சூப்பர் ஐடியா
சென்னை: அண்மையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் நோக்கி பேருந்து முனையத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் இந்த டிப்ஸை பின்பற்றினால் எளிதில் சென்னைக்கு செல்லலாம்.
சென்னையில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து முனையமாக கோயம்பேடு இருந்து வந்தது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்று பழக்கப்பட்ட மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பயன்படுத்த முடியாமல் குழம்பினர்.

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு வர முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்து மூலம் சென்னை வருபவர்கள் சிரமங்களை தவிர்க்கும் அருமையான யோசனையை வழங்கி இருக்கிறார் பயணி ஒருவர். இதுகுறித்து அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, “சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவோர் ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.
அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர் கிளம்பாக்கம் வந்து, அதன் பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.
எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், தி நகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும்.
சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின் ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அது மட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள். எளிதாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications