சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், மின்நுகர்வோர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு படிப்படியாக மாற்றும் பணி நடந்து வருகிறது. சென்னையில் கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே சென்னையில் 11 மண்டலங்களில் இன்று (சனி) அதிகாலை 12.01 மணி முதல் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு மின்கட்டணத்தை ஆன்லைன் மற்றும் மின்கட்டண வசூல் மையங்கள் மூலம் பணம் செலுத்தும் சேவைகள் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகளை பெற இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், மின்நுகர்வோர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு படிப்படியாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மேம்பாட்டுப் பணிகள் முதல்கட்டமாக சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை வடக்கு, சென்னை மத்திய மற்றும் சென்னை மேற்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

இதன் காரணமாக, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பொன்னேரி, எழும்பூர், தியாகராயநகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.01 மணி முதல் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு மின்கட்டணத்தை ஆன்லைன் மற்றும் மின்கட்டண வசூல் மையங்கள் மூலம் பணம் செலுத்தும் சேவைகள் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகளை பெற இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், இன்று (சனிக்கிழமை) கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு 9-ந்தேதி வரையில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் தங்களது மின்கட்டணங்களை செலுத்துவதற்கும் மற்றும் புதிய மின் இணைப்பிற்கான விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் சென்னை மண்டலத்தைத் தவிர மற்ற ஊர் மக்கள் வழக்கம்போல ஆன்லைனில் மின் கட்டணத்தைச் செலுத்த முடியும். இந்தக் கட்டுப்பாடு மற்றும் சேவை பாதிப்பு என்பது சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட 11 கோட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மின்பகிர்மானக் கழகம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக சொல்வது என்றால், பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பொன்னேரி, எழும்பூர், தியாகராயநகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு ஆன்லைன் சேவை இயங்காது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பிற மாவட்டங்களில் ஆன்லைன் மின்கட்டணச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றிச் செயல்படும்.












Click it and Unblock the Notifications