இந்து தீவிரவாதி பேச்சு.. தேர்தல் ஆணையத்தின் வாய்ப்பூட்டு கமலுக்கா, ராஜேந்திர பாலாஜிக்கா?
Recommended Video
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து கோட்சே என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது என்கிற பராசக்தி பட வசனத்தை போல தற்போதைய லோக்சபா தேர்தல் களம் காணுகிற அத்தனை அழிச்சாட்டியங்களுக்கும் சாட்சியமாக இருக்கிறது. எந்த ஒரு எதிர்விளைவுகளையும் பற்றிக் கவலைப்படாமல் தனி மனித தாக்குதல்கள் தரம் தாழ்ந்து கரைபுரண்டோடுகிற தேர்தல் களம்.

எந்த ஒரு சமூகப் பொறுப்புமே இல்லாமல் வெறுப்பு அரசியலை விஷமாய் வீச்சோடு வீசி எறிந்திருக்கும் தேர்தல் களம் இது. தாம் வகிப்பது பிரதமர் பதவிதான் என்பதை உணர்ந்தும் கூட மோடியும் அவரது பரிவாரங்களும் அப்படித்தான் பேசின.
இது தொடர்பாக எத்தனை எத்தனை புகார்கள் கொடுத்தாலும் தேர்தல் ஆணையம் கை கட்டி வேடிக்கை பார்த்தது. இந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், சுதந்திர இந்தியாவின் முதலாவது தீவிரவாதி இந்து; அவர் பெயர் கோட்சே என திருவாய் மலர்ந்துள்ளார்.
இந்துக்களின் பிரதிநிதி அல்ல கோட்சே என்பது அந்த கொலைகாரன் ஒரு இயக்கத்தின் பிரதிநிதி என்பதும் 'ஹேராம்' கமல்ஹாசன் அறியாதது அல்ல. ஆனால் என்ன செய்வது.. வாய்க்கு வந்ததை உளறிவிட்டு எதைத் தின்றால் பித்தம் தெளியும் என இன்னொன்றை உளறிவைப்பதுதான் உலக நாயகனுக்கு அழகாயிற்றே.
சரி அவர்தான் அப்படி பேசினார் எனில், வட இந்திய பாஜக சங்க பரிவாரங்களுக்கு தலைவர் போல தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசினார். இப்படி நாக்கை அறுப்பது, தலையை வெட்டினால் ரூ1 கோடி பணம் தருவது என்பதெல்லாம் அகோரிகள் அம்மணமாக வலம் வரும் வடக்கு இந்தியாவின் வாடை என்பதை தமிழகமும் அறியும்.
இப்போது கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் 'பக்க சார்பு' என்னவென்றால் என்றே தெரியாத தேர்தல் ஆணையம் கமல்ஹாசனுக்கு வாய்ப்பூட்டு போடலாம். அதற்கான சாத்தியங்கள் அதிகம்.. அதே நேரத்தில் மதத்தின் பெயரால் நாக்கை வெட்டுவேன்.. நடமாடவே முடியாது.. என்றெல்லாம் மிரட்டிய ராஜேந்திர பாலாஜி, எச். ராஜாக்களின் கூக்குரல்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இருக்கவே இருக்காது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
வாய்ப்பூட்டுக்கு தயாராகட்டும் கமல்!












Click it and Unblock the Notifications