ரூ4 கோடி விவகாரம்- நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பெரும் சிக்கல்- ஐடி விசாரிக்கிறது!
சென்னை: ரூ4 கோடி சிக்கிய விவகாரத்தில் திருநெல்வேலி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரூ4 கோடி விவகாரத்தை விசாரிக்க வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் பயணித்த 3 பேரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது 3 பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து 3 பேரின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. அப்போதுதான் போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

3 பேரிடம் இருந்த பைகளில் கத்தை கத்தையாக ரூ500 கட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ4 கோடி ரொக்கப் பணம் 3 பேரிடமும் இருந்து கைப்பற்றப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து பாஜக உறுப்பினர் அட்டைகளும் சிக்கின. பின்னர்தான் 3 பேரும் திருநெல்வேலி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் பணியாளர்கள் என்பது தெரியவர பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ரூ4 கோடி கொண்டு செல்வதாக 3 பேரும் தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து இந்த பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இத்தகவல்களின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இச்சோதனைகளைத் தொடர்ந்து, ரூ4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக தாங்கள் வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரைத்துவிட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாரிடம் இருந்த ரூ4 கோடி பெறப்பட்டது? எதற்காக பெறப்பட்டது? ரூ4 கோடி நயினார் நாகேந்திரனுக்குதான் கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா? நயினார் நாகேந்திரன் கொடுக்க சொன்னது யார்? என்கிற கேள்விகளுக்கு விரைவில் விடை தெரியும் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications