பொன்முடியை தொடர்ந்து மகன்.. திமுக எம்பி கவுதம சிகாமணி மீதான அமலாக்கத்துறை வழக்கு இன்று விசாரணை
சென்னை: பொன்முடியின் மகனும், திமுக எம்பியுமான கவுதம சிகாமணிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட வழக்கு இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை விதித்தது. இதையடுத்து அவரிடம் இருந்து இலாகா பறிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அங்கு நிலுவையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க 2006-2011 காலத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதோடு அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தயதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில் பொன்முடி மீதும் அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கவுதம சிகாமணி மீதும் வழக்கு பதிவு செய்பயப்ட்டது
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த புகாரில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கி சோதனை மேற்கொண்டது. ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் உள்பட ரூ.81.70 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரூ.41 கோடியே 90 லட்சம் வங்கி வைப்பு நிதியும் முடக்கப்பட்டது.
மேலும் இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கவுதம சிகாமணி எம்பி உள்பட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் கவுதம சிகாமணி எம்பி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 24ம் தேதிக்குள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications